இந்தியாவில் ஜீரோ! ஆனா, வெளிநாட்ல இதுதான் புலி.. 2019ல் உலகளவில் அதிகம் விற்பனையான கார் எது தெரியுமா?
2019ம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையான காரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகின் அதிகம் விற்பனையாகும் கார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த இடத்தை டொயோட்டா நிறுவனத்தின் கொரோல்லா கார் பிடித்திருக்கின்றது. இது ஓர் செடான் ரக கார் ஆகும். இந்த கார்தான் கடந்த 2019ம் ஆண்டில் அதிகளவில் விற்பனையான கார் என்ற மகுடத்தை சூடியிருக்கின்றது.

அதாவது, உலகத்தின் ஏதோவொரு மூலையில் மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் இந்த கார் அமோகமான விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருப்பதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது. இந்த புதிய தகவல் இந்திய கொரோல்லா கார் பயனர்களைப் பெருமையடையச் செய்துள்ளது.

அதேசமயம் இந்த கார் கடந்த 2018ம் ஆண்டில் உலகளவில் அதிகம் விற்பனையாகும் கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தது. அதாவது, 9,34,348 யூனிட்டுகளை விற்பனைச் செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது. அப்போது, 10,76,153 யூனிட்டுகளை விற்பனைச் செய்து ஃபோர்டு நிறுவனத்தின் எஃப் செரீஸ் கார்கள் முதல் இடத்தைப் பிடித்திருந்தது.

ஆனால் இப்போது ஃபோர்டு நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது டொயோட்டா கொரோல்லா கார். அதாவது, கடந்த 2019ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக 12,36,380 யூனிட்டுகளை விற்பனைச் செய்து உலகின் அதிகம் விற்பனையாகும் காராக கொரோல்லா உருவெடுத்துள்ளது. இது 2018ம் ஆண்டைக் காட்டிலும் 4 மடங்கு அதிக விற்பனை வளர்ச்சியாகும்.

உலகளவில் அதீத டிமாண்டை ஏற்படுத்தி வரும் இந்த கார் இந்தியாவில் ஏனோ பெரியளவில் சந்தையை பிடிக்க தவறிவிட்டது. இதன் விளைவாக டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு இந்த காரின் ஆல்டிஸ் மாடலை சந்தையை விட்டு வெளியேற்றியது. இதுமட்டுமின்றி எட்டியோஸ் செரீஸ் வகை கார்களுக்கும் முற்றுபுள்ளி வைத்துவிட்டது.

எனவே, டொயோட்டாவின் கர்நாடகா பிடாடி பிளாணட்டில் இந்த கார்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அண்மைக் காலங்களாக குறைந்து வரும் விற்பனை விகதமே மிக முக்கியமான காரணம். இந்த கார் கடந்த 2019ம் ஆண்டு முழுவதிலும் வெறும் 1,422 யூனிட்டுகளை மட்டுமே விற்பனையாகி இருந்தது. இம்மாதிரியான விற்பனை வீழ்ச்சியே இந்தியாவை விட்டு இதன் ஆல்டிஸ் பிராண்ட் வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

வெளிநாடுகளில் மட்டும் இந்த காருக்கு ஏன் இப்படி ஒரு அபரீதமான வரவேற்பு என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். இந்த கார் நமது இந்தியாவில் விற்கப்படுவதைக் காட்டிலும் பல மடங்கு அதிக தொழில்நுட்பத்தைப் பெற்ற மாடலாக கிடைக்கின்றது. அதேசமயம், குறைந்த விலையில் அதிக சொகுசு அம்சங்களை வாரி வழங்கும் கார்களில் இது முதல் இடத்தில் இருப்பதால் வெளிநாட்டு மக்கள் இந்த கார் மீது அளவுகடந்த மோகத்தைச் செலுத்தி வருகின்றனர்.

அதேசமயம், வெளிநாடு-இந்தியா கொரோல்லா மாடல்களுக்கு இடையே பெரியளவில் வித்தியாசம் இல்லை என ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இருப்பினும், இதைக் காட்டிலும் குறைந்த விலையில் அதிக சொகுசு வசதிகளை அடக்கிய கார்கள் பல இந்தியாவில் கிடைப்பதால், டொயோட்டா கொரோல்லா போன்ற கார்கள் சந்தையில் தலையெடுக்க முடியாமல் மறைந்து விடுகின்றன.

தற்போது டொயோட்டாவின் எடியோஸ் செரீஸ் மற்றும் கொரோல்லா ஆல்டிஸ் கார்கள் இந்திய சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தாலும், அந்த கார்களை ஏற்கனவே வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் சர்வீஸ் மையங்கள் வாயிலாக டொயோட்டா வழங்க இருப்பதாக உறுதியளித்துள்ளது. ஏனென்றால், முந்தைய காலங்களில் அதிகம் விற்பனையாகும் கார்களில் எடியோஸ் செரீஸ் கார்களும் ஒன்றாக இருந்தது.

இப்போதும் பலர் இந்த காரை இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, உள்நாட்டு சந்தையில் மட்டும் எடியோஸ் செரீஸ் கார்கள் இதுவரை 4,48,500 யூனிட்டுகள் விற்கப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, ஏற்றுமதியிலும் சக்கைப் போடும் வகையில் 1,31,200 யூனிட்டுகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. கொரோல்லா ஆல்டிஸ் காரும் இதுவரை 1,16,500 யூனிட்டுகள் இந்தியாவில் விற்பனைச் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








