கொரோனோ பரவும் வாய்ப்பு... ஆஸ்திரேலிய ஃபார்முலா-1 கார் பந்தயம் ரத்து!
கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதையடுத்து, ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ஃபார்முலா-1 கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் உலகையே நடுங்க வைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் வேகம், மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படும் அளவுக்கு நிலைமையை மாற்றி இருக்கிறது. இந்த நிலையில், 2020 சீசனுக்கான முதல் ஃபார்முலா-1 பந்தயம் ஆஸ்திரேலியாவில் இந்த வார இறுதியில் நடக்க இருந்தது.

இந்த நிலையில், மெக்லாரன் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஃபார்முலா-1 அணி வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், பிறருக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு இருப்பதால், வீரர்கள் பலர் போட்டியில் பங்கேற்க விரும்பவில்லை.

இதுகுறித்து ஃபார்முலா-1 பந்தயத்தை நடத்தும் எஃப்ஐஏ அமைப்பும், ஆஸ்திரேலியாவின் கிரான்ட் பிரிக்ஸ் அமைப்பு ஆகியவை ஃபார்முலா-1 பந்தய அணிகளுடன் ஆலோசனை நடத்தின. இதில், கொரோனா பாதிப்பு பிறருக்கும் எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த சூழலில், போட்டியை நடத்துவது விபரீதத்தில் முடியும் வாய்ப்பு இருப்பதாக கருதி, ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த இந்த ஆண்டுக்கான முதல் ஃபார்முலா-1 கார் பந்தயம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

இதனிடையே, ஃபெராரி அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் மற்றும் அல்ஃபா ரோமியோ அணி வீரர் கிமி ராய்கோனென் ஆகியோர் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கும் முன்னரே, வந்த விமானத்திலேயே திரும்பவும் தாயகம் திரும்பி விட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

போட்டியை ரத்து செய்வது தொடர்பான பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்த நிலையில், அதற்கு முன்பாகவே வீரர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து சொந்த ஊருக்கு சொல்லாமல் கொள்ளாமல் சென்றது ஃபார்முலா-1 ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

மேலும், ஆலோசனை கூட்டம் நள்ளிரவு வரை நீடித்த நிலையில், அவர்களுக்கு இதுகுறித்த தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், அடுத்த மாதம் பஹ்ரைன் நாட்டில் நடக்க இருக்கும் ஃபார்முலா-1 போட்டியானது பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தால், வீரர்கள் வருவதற்கு அச்சம் தெரிவித்தால், சிக்கல் எழும் வாய்ப்புள்ளது. இதேபோன்று, மோட்டோஜீபி பைக் பந்தயமும் வீரர்கள் இல்லாமல் நடத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








