என்னது!! 2 யானைகளின் எடையைகூட இந்த கார் தாங்குமா..? அதிக வலிமையுடைய ஹூண்டாய் க்ரெட்டா..!
ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை க்ரெட்டா எஸ்யூவி கார் இரு நன்கு வளர்ந்த ஆப்பிரிக்க யானைகளின் எடையை தாங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான எஸ்யூவி ரக கார்களில் க்ரெட்டா மாடலும் ஒன்று. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பே காணப்பட்டது. இதனால், ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எஸ்யூவி காராக மட்டுமில்லாமல் இந்தியாவிலும் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவியாக க்ரெட்டா மாறியது.

அறிமுகம் செய்யப்பட்ட சில வருடங்கள் வரை க்ரெட்டாவிற்கு இத்தகைய நிலையே இந்தியாவில் காணப்பட்டது. ஆனால், கியா நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் இந்நிலை அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.
கியா நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டே அதன் கால் தடத்தை முதல் முறையாக பதித்தது.

அப்போது, இந்தியாவிற்கான முதல் மாடலாக செல்டோஸ் எஸ்யூவி ரக காரை களமிறக்கியது. இந்த கார் யாரும் எதிர்பார்க்காத விலையில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டதாக களமிறக்கப்பட்டது. குறிப்பாக, இந்தியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பான குறைந்த விலை, அதிக சொகுசு என்ற பார்வைக்கு ஏற்ப அந்த கார் காணப்பட்டது.

ஆகையால், கியா நிறுவனமே எதிர்பாராத வகையிலான மிக பிரமாண்ட வரவேற்பை இந்திய எஸ்யூவி வாகன சந்தையில் செல்டோஸ் எஸ்யூவிக்கு கிடைத்தது. இதனால், நாட்டு ஜாம்பவான் நிறுவனங்களான டாடா மற்றும் மஹிந்திராவை பின்னுக்கு தள்ளி நாட்டிலேயே மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் 3வது இடத்தை கியா பெற்றது.

இந்த நற்சான்றை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அடுத்தடுத்தாக புதிய மாடல்களை களமிறக்க ஆயத்தமாகி வருகின்றது கியா.
இதனால், க்ரெட்டாவிற்கான சந்தை நாளுக்கு நாள் குறைந்து, இக்கட்டான சூழல் ஏற்பட ஆரம்பித்தது. இதற்கு முக்கிய காரணம் கியாவின் செல்டோஸ் என்பதால், இதைக் காட்டிலும் சற்று கூடுதல் அம்சங்களை க்ரெட்டாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டது.

அதன்படி, புதிய தலைமுறையாக உருவாக்கப்பட்ட க்ரெட்டாவை ஹீண்டாய் நிறுவனம் அண்மையில் நடைபெற்ற 2020 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியது.
இந்த புதிய தலைமுறை க்ரெட்டா எஸ்யூவியை அந்நிறுவனம் முதல் முறையாக சீனாவிலேயே காட்சிப்படுத்தியிருந்தது.

இதையடுத்தே இந்தியா வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. தொடர்ந்து, விரைவில் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் காத்திருக்கின்றது.
இம்மாதத்தின் இறுதிக்குள் அதன் அறிமுகம் அரங்கேறிவிடலாம் என்ற உறுதியான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

இதனால், சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மீது வாகனத்துறை அனைத்தும் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டாவைப் பற்றிய வியப்பில் ஆழ்த்தும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது, க்ரெட்டாவின் மேற்கூரையைப் பற்றியதாகும்.

இந்த மேற்கூரை 12 ஆயிரம் கிலோவைக் கூட அசால்டாக தாங்கிவிடும் என கூறப்படுகின்றது. அதாவது, இரு நன்கு வளர்ந்த ஆப்பிரிக்க யானைகளின் எடையைக் கூட இந்த காரின் மேற்கூரை எளிதா தாங்கிவிடும் என கூறப்பட்டிருக்கின்றது. ஒரு நன்கு வளர்ந்த ஆப்பிரிக்க யானை சுமார் 5,400 கிலோவுக்கும் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதனை நிரூபிக்கும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் எலன்ட்ரா மாடலின் 7 யூனிட்டுகளை க்ரெட்டாவின் மேற்கூரை மீது நிறுத்தி வைத்து பரிசோதனை மேற்கொண்டது.
இந்த பரிசோதனையில் க்ரெட்டாவின் மேற்கூரை சிறிதளவும் சேதமடையாமல் அப்படியே கம்பீரமாக நின்றது. அந்த கார்களின் ஒட்டுமொத்த எடை 12,200 கிகி ஆகும்.

இத்தகைய அதிக எடையை க்ரெட்டா எஸ்யூவி அசால்ட்டாக தாங்கி நின்றிருப்பது வாகனத்துறையில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும், இந்த அசாத்தியமான திறமையை க்ரெட்டா நிரூபித்திருப்பதால் இந்தியாவின் சி-எஸ்யூவி பிரிவில் அதிக பாதுகாப்புடைய காராக க்ரெட்டா மாறியிருக்கின்றது.

க்ரெட்டாவின் இத்தகைய திறனுக்காக 74.3 சதவீதம் அதிக உறுதி தன்மையுடைய அட்வான்ஸ்ட் ஸ்டீல் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனைக்கொண்டே க்ரெட்டாவின் உடற்கூடு முழுவதுமாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையின் காரணமாகவே க்ரெட்டாவிற்கு இந்த அசாத்தியமான திறன் கிடைத்திருக்கின்றது.

ஆகையால், இந்த கார் எதிர்காலத்தில் நடைபெறும் பாதுகாப்புகுறித்த பரிசோதனையில் புதிய தலைமுறை க்ரெட்டா எஸ்யூவி 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட காராக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பல ஆச்சரியமூட்டும் தகவலையும் இந்த பரிசோதனையின் மூலம் நமக்கு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாயின் இந்த அதீத திறனுடைய உடற்கூடை பெறும் முதல் கார் க்ரெட்டா எஸ்யூவியாக இருக்கின்றது. இதற்கு முன்பாக இதுபோன்ற அதிக திறன் கொண்ட உடற்கூடு இதுவரை எந்தவொரு தயாரிப்பிற்கும் ஹூண்டாய் பயன்படுத்தவில்லை. அதேசமயம், எலென்ட்ராவில் இதே திறனுடைய ஸ்டீல் கட்டுமானம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனாலயே ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்ட எலென்ட்ரா கார்களை அடிப்பகுதியில் இருக்கும் எலென்ட்ரா தாங்கி நிற்கின்றது.

புத்தம் புது தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா அதிக எடை தாங்கும் காராக மட்டுமின்றி கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை கொண்ட காராக விரைவில் களமிறங்க இருக்கின்றது.
அந்தவகையில், 300 கிலோ எடைக் கொண்ட மாடலாக களமிறங்கும் புதிய க்ரெட்டாவில், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங், இஎஸ்பி, முன் பக்கத்தில் இரு ஏர் பேக்குகள், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் மற்றும் தானாக லாக் ஆகும் கதவுகள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி, மூன்று விதமா எஞ்ஜின் தேர்வில் க்ரெட்டா இந்தியாவில் களமிறங்க இருக்கின்றது. 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆகிய எஞ்ஜின் தேர்வுகளில் அது கிடைக்க இருக்கின்றது. இந்த அனைத்து எஞ்ஜின்கள் பிஎஸ்-6 தரத்திலானவை ஆகும். இந்த தரம் கொண்ட எஞ்ஜின்கள் வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் கட்டாயம் ஆகும்.

இந்த காரில் கியர் தேர்வைப் பொருத்தவரை 1.5 லிட்டர் எஞ்ஜின் தேர்வுகளில் தானியங்கி மற்றும் மேனுவல் ஆகிய இருவிதமான டிரான்ஸ்மிஷனும் கிடைக்க இருக்கின்றது. அதேசமயம், 1.4 லிட்டர் தேர்வில் மட்டும் பிரத்யேகமாக 7 ஸ்பீடு டிசிடி மற்றும் ஸ்டியரிங் மவுண்டட் பேட்டில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications