செம டிமாண்ட்.... புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 8 மாதங்களாக உயர்ந்தது...
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 8 மாதங்களாக உயர்ந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு 1 மாதம் கடந்துள்ள நிலையில், நாடு முழுவதிலும் இருந்து புத்தம் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவிக்கு மிக பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.

மஹிந்திரா தார் எஸ்யூவியை வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர். எனவே 20,000 என்ற முன்பதிவு எண்ணிக்கையை மஹிந்திரா தார் எஸ்யூவி ஏற்கனவே கடந்து விட்டது. அதிக டிமாண்ட் இருப்பதால், மஹிந்திரா தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் தற்போது 8 மாதங்களாக உயர்ந்துள்ளது!
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

முன்னதாக தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய தலைமுறை தார் எஸ்யூவியின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்தது. ஆனால் அதற்கு மஹிந்திரா நிறுவனம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பது போல் தெரிகிறது. ஏனெனில் சமீபத்தில் 7 மாதங்களாக இருந்த புதிய தார் எஸ்யூவியின் காத்திருப்பு காலம் தற்போது 8 மாதங்களாக உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழலில், புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியை நீங்கள் இன்று முன்பதிவு செய்தாலும் கூட, வாகனம் டெலிவரி செய்யப்படுவதற்கு, அடுத்த ஆண்டின் பிற்பகுதி வரை நீங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும். ஒருவேளை மஹிந்திரா நிறுவனம் உற்பத்தியை அதிகரித்தால், காத்திருப்பு காலம் குறையலாம்.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியில், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் தேர்வுகளுமே வழங்கப்படுகின்றன. இதன் 2.2 லிட்டர் நான்கு-சிலிண்டர், டர்போ டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 130 பிஎஸ் பவரையும், 300 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதுதவிர 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் தேர்வும் புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவியில் வழங்கப்படுகிறது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 150 பிஎஸ் பவரையும், 300 என்எம் (ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனில் 320 என்எம்) டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் தேர்வுகளை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது.

இந்த எஸ்யூவியில், 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகளை மஹிந்திரா நிறுவனம் வழங்குகிறது. பாதுகாப்பை பொறுத்தவரையில், முன் பகுதியில் இரண்டு ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இபிடி உடன் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்படுகிறது.

மேலும் ரியர் பார்க்கிங் சென்சார்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் மற்றும் ஹில் டெசண்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை புதிய தலைமுறை மஹிந்திரா தார் எஸ்யூவி பெற்றுள்ளது. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியை பிரபலங்கள் பலரும் தற்போது ஆர்வமுடன் டெலிவரி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








