எலக்ட்ரிக் வெர்சனில் மீண்டும் உயிர் பெறுகிறதா டாடா நானோ?! ஆனால் பெயர் நானோ கிடையாதாம்
டிஜிட்டல் வேகமானி உடன் 2021 டாடா நானோ எலக்ட்ரிக் கார் ஒன்று பரபரப்பான இந்திய சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களையும் இந்த எலக்ட்ரிக் காரின் வருகை எப்போது இருக்கும் என்பது குறித்த தகவலையும் இந்த செய்தியில் பார்ப்போம்.

2017ல் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனமும் கூட்டாக இணைந்து ஜெயம் நியோ பிராண்டின் கீழ் பிரபலமான நானோ காரின் எலக்ட்ரிக் வெர்சனை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருந்தன.

இந்த எலக்ட்ரிக் காரில் முதல் 400 யூனிட்கள் ஓலா எலக்ட்ரிக் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக அப்போது கூறப்பட்டது. அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டின் மத்தியில் டாடா நிறுவனம் 40 கோடி ரூபாயை ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்தது.

இந்த நிலையில் தற்போது 2021 டாடா நானோ எலக்ட்ரிக் சோதனை மாதிரி ஒன்று புனேவில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த 3 வருடங்களில் இந்த திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கைவிட்டது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன.

ஆனால் தற்போது ஜெயம் நியோ என்ற நானோ எலக்ட்ரிக் கார் பொது சாலையில் சோதிக்கப்பட்டிருப்பது டாடா மற்றும் ஜெயம் நிறுவனங்கள் இந்த திட்டத்தை முழுவதுமாக கைவிடவில்லை என்பது தெரிய வருகிறது. இந்த சோதனை ஓட்ட ஸ்பை வீடியோ ரஷ்லேன் செய்திதளத்தின் மூலமாக கிடைத்துள்ளது.
இந்த சோதனை மாதிரியில் எங்கேயும் டாடா நிறுவனத்தின் லோகோவை பார்க்க முடியவில்லை. தயாரிப்பு செலவு குறைப்பிற்காக இந்த காரில் கருப்பு நிற ப்ளாஸ்டிக் பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரின் தரம் இவ்வளவுதானா என்ற கேள்வியுடன் காரை சற்று உற்று பார்த்தால், நமக்கு ஒரு ஆச்சிரியம் காத்திருக்கிறது.

அதுதான் மைய கன்சோலில் பொருத்தப்பட்ட முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை. இதுகுறித்த வீடியோவின் மூலம் டாடா நானோ இவி காரில் எலக்ட்ரா இவி-யின் 17.7 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது.

அதிகப்பட்சமாக 23 எச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த எலக்ட்ரிக் மோட்டாரை வழங்கியுள்ள எலக்ட்ரா இவி நிறுவனத்தில் இருந்துதான் டாடா டியாகோ மற்றும் டிகோர் மாடல்களுக்கான எலக்ட்ரிக் மோட்டார்களும் வாங்கப்பட்டுள்ளன. ஆனால் 3 வருடங்களுக்கு முன்னர் இந்த எலக்ட்ரிக் காரில் ஜெயம் நிறுவனம் எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தவுள்ளதாக கூறப்பட்டது.

டாடா நானோ, மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சந்தையில் அறிமுகமான மலிவான கார். நடுத்தர குடும்பங்களும் தங்களது கார் கனவை நினைவேற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக வெறும் ரூ.1 லட்சம் அளவிலான விலைகளில் நானோ காரை கொண்டுவந்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.

ஆனால் அதன்பின் நானோ கார் உரிமையாளர்களுக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களால் விற்பனை குறையவே இந்த மலிவான காரின் விற்பனையை டாடா நிறுத்தி கொண்டது. இருப்பினும் எலக்ட்ரிக் வெர்சனில் டாடா நானோ வெளிவந்தால் நன்றாகதான் இருக்கும் என பலர் நினைப்பது உண்மையே.

குறிப்பாக டாக்ஸி மற்றும் தனியார் பயன்பாட்டிற்கு டாடா நானோ இவி கார் ஏற்றதாக இருக்கும். இருப்பினும் இந்த எலக்ட்ரிக் காரின் அறிமுகம் குறித்து எந்தவொரு தகவலும் டாடா மோட்டார்ஸில் இருந்தோ அல்லது ஜெயம் ஆட்டோமோட்டிவ்ஸ் நிறுவனத்தில் இருந்தோ தற்போதைக்கு இல்லை.


Click it and Unblock the Notifications








