அமெரிக்கா, கனடா விமான நிலையங்களுக்கு இணையானதாக மாறும் கொல்கத்தா ஏர்போர்ட்... உபேர் அதிரடி திட்டம்!
அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் மட்டுமே வழங்கி வரும் சிறப்பு சேவையை இந்தியாவில் தொடங்கியிருப்பதாக உபேர் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

உலக புகழ்பெற்ற கால் டாக்சி சேவை நிறுவனமான உபேர், இந்தியாவின் மாபெரும் வாடகை நிறுவனமாக உருவெடுத்து வருகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் இந்தியாவின் கால் டாக்சி துறையில் கொடிக் கட்டி பறக்கும் நிறுவனமாக இது மாறியுள்ளது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு சேவைகளை அது இந்தியாவில் அறிமுகப்படுத்தி வருகின்றது.

அந்தவகையில், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மட்டுமே செய்து வரும் சிறப்பு சேவையை விரைவில் இந்தியாவில் தொடங்க இருப்பதாக அது தகவல் வெளியிட்டுள்ளது. இதற்காக மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தை அது தேர்வு செய்துள்ளது.

'எக்ஸ்பிரஸ்மேட்ச்' எனும் சேவையைதான் உபேர் விரைவில் இங்கு தொடங்க இருக்கின்றது. எக்ஸ்பிரஸ்மேட்ச் என்பது வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரத்தை பூஜ்ஜியமாக மாற்றும் சேவை ஆகும். மிக தெளிவாக கூற வேண்டுமானால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு வெளியே காணப்படும் வழக்கமான ஆட்டோ மற்றும் வாடகைக் கார்களைப் போன்று உபேர் நிறுவனத்தின் பார்ட்னர்கள் நிறுத்தி வைக்கப்படுவர்.

இவர்களிடத்தில் எந்த பேரமும் பேசாமல், குறிப்பாக அதிக கட்டணத்தில் ஏமாறாமல் சேர வேண்டிய இலக்கை மட்டும் கூறினால் போதும். உபேர் நிர்ணயித்திருக்கும் நியாயமான கட்டணத்தின் அடிப்படையில் உபேர் பார்ட்னர்கள் வாடிக்கையாளரைச் சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிடுவர். இதற்காக விமான நிலையத்திற்கு வெளியே கணிசமான எண்ணிக்கையில் கார்கள் முன்கூட்டியே நிறுத்தி வைக்கப்படும்.

உபேரின் இந்த சேவைக்காக தனி ஸ்டாண்ட் ஒன்று நிறுவப்படும் அங்குதான் இதன் கால் டாக்சிகள் வாடிக்கையாளர்களுக்குக் காத்துக் கொண்டிருக்கும். இதனைப் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர், டிரைவரை நேரடியாக தொடர்பு கொண்டு சேர வேண்டிய இடத்தை மட்டும் சொன்னால் போதும் எந்த விதமான காத்திருப்பும் இன்றி உடனடியாக பயணிக்க முடியும்.

இதற்காக உபேர் செயலிக் கொண்டு புக் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும், வழக்கமான கட்டணத்தையே உபேர் இதற்கு வசூலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உபேர் நிறுவனத்தின் கால் டாக்சி சேவை மிக பிரபலமாக இருப்பதற்கு, அதன் குறைந்த விலை கட்டணம் மற்றும் துரிதமான சேவை ஆகியவையே காரணமாக இருக்கின்றது.

எனவேதான், அதன் கட்டண திட்டத்தில் எந்த மாற்றத்தையும் உபேர் செய்யாது என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், கட்டணம்குறித்த தகவலை இதுவரை உபேர் வெளியிடவில்லை. கொல்கத்தாவில் எக்ஸ்பிரஸ்மேட்ச் சேவையைத் தொடங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அந்நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை (03 நவம்பர்) அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அந்த அறிவிப்பில், அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் விமான நிலையங்களுக்கு அடுத்து முதல் முறையாக இந்தியாவில், கொல்கத்தாவில் இந்த சேவையை தொடங்க இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இதனால், கால் டாக்சியை புக் செய்து விட்டு, அது வரும் வரை காத்திருக்கவேண்டும் என்ற நிலையே இருக்காது என்றும் அது கூறியுள்ளது.

உபேர் நிறுவனம் முதல் கட்ட நடவடிக்கையாக இந்த திட்டத்தை கொல்கத்தாவில் தொடங்குகின்றது. இதன் வெற்றிக்கு பின்னரே நாட்டின் பிற விமானங்களில் இந்த சேவை தொடங்கப்படும் என யூகிக்கப்படுகின்றது. இந்த சேவை மிக அவசர அவசரமாக வரும் பயணிகளுக்கு மிகுந்த உதவியாக அமைய இருக்கின்றது.

இத்தகையோரைக் கருத்தில் கொண்டே உபேர் நிறுவனம் இந்தியாவில் இச்சேவையைத் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்மையில் இந்த நிறுவனம், ஆட்டோக்களை வாடைக்கு வழங்கும் சேவையையும் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இவ்வாறு, தனது ராஜ்ஜியத்தை இந்தியாவில் நிலை நாட்டும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது உபேர்.


Click it and Unblock the Notifications








