அடுத்த வாரம் அறிவிப்பு! 2030 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை? எங்கு தெரியுமா?
இங்கிலாந்தில் வரும் 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் வரும் 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விற்பனைக்கு தடை என்ற அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனேகமாக அடுத்த வாரம் வெளியிடுவதற்கு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலில் வரும் 2040ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிப்பதற்கு இங்கிலாந்து முடிவு செய்திருந்தது. இதனை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், 2035ம் ஆண்டு என கொண்டு வந்தார். இதற்கான முடிவு நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது இதனை மேலும் குறைத்து 2030ம் ஆண்டு என முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அத்துடன் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் போரிஸ் ஜான்சன் அடுத்த வாரம் வெளியிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இங்கிலாந்து எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு முழுமையாக தடை விதிப்பது என்பது எந்த ஒரு நாடு என்றாலும் மிகப்பெரிய நடவடிக்கைதான். இங்கிலாந்தும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இன்னும் சொல்லப்போனால், இங்கிலாந்து ஆட்டோமொபைல் சந்தையில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றமாக இது அமையலாம்.

இங்கிலாந்தில் நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரையிலான புதிய கார்களின் விற்பனையில், பெட்ரோல், டீசல் கார்களின் பங்கு மட்டும் 73.6 சதவீதம் ஆகும். ஆனால் புதிய கார்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில், எலெக்ட்ரிக் கார்களின் பங்கு வெறும் 5.5 சதவீதம் மட்டுமே. எஞ்சிய அனைத்தும் ஹைப்ரிட் கார்கள் ஆகும்.

ஆனால் வரும் 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை என்ற அறிவிப்பு வெளியானாலும், சில ஹைப்ரிட் கார்களுக்கு விலக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வரும் 2035ம் ஆண்டு வரை ஹைப்ரிட் கார்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஃபைனான்ஸியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. அத்துடன் பெட்ரோல், டீசல் இறக்குமதிக்காக உலக நாடுகள் பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடும் தொகையை குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதுகாக்க முடியும். இந்தியாவிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








