முந்தும் நார்வே... பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கவுள்ள நாடுகள்/பிராந்தியங்கள்
பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கவுள்ள உலக நாடுகள்/பிராந்தியங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் வரும் 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் வேன்களின் விற்பனை தடை செய்யப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். முதலில் 2035ம் ஆண்டில் இருந்து இந்த தடையை அமலுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை விதிக்கப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால் காற்று மிக கடுமையாக மாசடைகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு உலகின் பல்வேறு நாடுகளும், பிராந்தியங்களும் திட்டமிட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களைதான் இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அமெரிக்கா:
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வரும் 2035ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசலில் இயங்கும் புதிய பயணிகள் கார்கள் மற்றும் லாரிகளின் விற்பனைக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை கலிஃபோர்னியா மாகாணத்தின் கவர்னர் காவின் நியூசம், கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்.

கனடா:
கனடாவில் உள்ள மாகாணங்களில் ஒன்றான க்யூபெக்கும், பெட்ரோல், டீசலில் இயங்கும் புதிய பயணிகள் கார்களின் விற்பனைக்கு அதிரடியாக தடை விதிக்கவுள்ளது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை போல், இங்கும் வரும் 2035ம் ஆண்டு முதல் இந்த தடை அமலுக்கு வரவுள்ளது. இதற்கான அறிவிப்பை இந்த வாரம்தான் க்யூபெக் வெளியிட்டது.

ஜெர்மனி:
அதிக மாசுவை உமிழும் பழைய டீசல் வாகனங்களுக்கு எதிராக ஜெர்மன் நகரங்கள் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பழைய டீசல் வாகனங்களுக்கு, அவை தடை விதிக்க தொடங்கியுள்ளன. கடந்த 2018ம் ஆண்டு முதலே ஜெர்மன் நகரங்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

நார்வே:
எண்ணெய் மற்றும் எரிவாயு வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் நாடுகளில் ஒன்றான நார்வே, பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக உருவெடுக்க விரும்புகிறது. வரும் 2025ம் ஆண்டு இதற்கான காலக்கெடுவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நார்வேயில் தற்போது ஒவ்வொரு மாதமும் விற்பனையாகும் மொத்த கார்களில் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது.

சீனா:
பாரம்பரியமான பெட்ரோல் மற்றும் டீசலை பயன்படுத்தி இயங்கும் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை எப்போது முதல் தடை செய்வது? என்பது தொடர்பாக கடந்த 2017ம் ஆண்டே சீனா ஆய்வு செய்ய தொடங்கியது. ஆனால் இந்த தடை எப்போது அமலுக்கு கொண்டு வரப்படும்? என்பது தொடர்பாக சீனா எந்த ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தையும் குறிப்பிடவில்லை.

இதுதவிர இந்தியா உள்பட இன்னும் பல்வேறு நாடுகளும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் ஆர்வமாக உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு செலவிடும் தொகையை குறைக்க முடியும் என்பது இந்தியா போன்ற நாடுகளுக்கு கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








