கலக்குங்க... ஜெர்மனி அரசின் சூப்பர் மூவ்... மக்கள் இனி தன்னால எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவாங்க...
மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என்பதற்காக ஜெர்மனி அரசு சூப்பரான நடவடிக்கையை எடுத்துள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து இந்த உலகம் வெகு வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகிறது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. உலகின் காற்று மாசுபாடு பிரச்னைக்கு, பெட்ரோல், டீசல் வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன.

அத்துடன் பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக உலக நாடுகள் பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. இதனால் இந்த இரு பிரச்னைகளுக்கும் முடிவு கட்டும் விதமாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை உலக நாடுகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதில் பல்வேறு தடைகள் இருந்து வருகின்றன. முதலாவது விலை. பெட்ரோல், டீசல் வாகனங்களை காட்டிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை அதிகமாக உள்ளது. இரண்டாவது காரணம் ரேஞ்ச் பற்றிய பயம். தற்போது பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கைக்கு நிகராக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை.

எனவே நடுவழியில் சார்ஜ் தீர்ந்து வாகனம் நின்று விட்டால் சிக்கல்தான். இந்த இரு பிரச்னைகளுக்கும் முடிவு கட்டினால் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் ஏற்படும். இதனால் இந்த இரண்டு பிரச்னைகளையும் களைவதற்கு, உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

இந்த வரிசையில் ஜெர்மனி தற்போது வெளியிட்டுள்ள அதிரடி உத்தரவுகள் கவனம் பெற்றுள்ளன. ஜெர்மனி முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அந்நாட்டு அரசு தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஜெர்மனியில் 14,118 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன.

இந்த பெட்ரோல் பங்க்குகள் அனைத்திலும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருப்பது தற்போது கட்டாயமாக்கபட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் பற்றி மக்களுக்கு இருக்கும் பயத்தை போக்கவும், மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதை ஊக்குவிக்கவும், ஜெர்மனி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன் ஐசி (Internal Combustion - IC) இன்ஜின் உடன் பெரிய எஸ்யூவி கார்களை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வரி விதிக்கவும் ஜெர்மனி அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கினால் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெர்மனியில் கடந்த 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட புதிய பயணிகள் கார்களில், எலெக்ட்ரிக் கார்களின் பங்கு வெறும் 1.8 சதவீதம் மட்டுமே. அதே சமயம் பெட்ரோல் கார்களின் எண்ணிக்கை 59.2 சதவீதமாகவும், டீசல் கார்களின் எண்ணிக்கை 32 சதவீதமாகவும் இருந்தது. இது ஜெர்மனியில் காற்று மாசுபாடு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

எனவேதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு எடுத்து வருகிறது. ஜெர்மனி தவிர உலகின் மற்ற நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இதற்காக தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன.

இதன்படி இங்கிலாந்து அரசு வெகு விரைவில் புதிய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசியை வெளியிடவுள்ளது. இதில், பெட்ரோல், டீசல் கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்து விட்டு எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 5.70 லட்ச ரூபாயை ஊக்க தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஜூலை 6ம் தேதி புதிய கார் ஸ்கிராப்பேஜ் பாலிசியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








