கார்களுக்கான புதிய கேமிரா அறிமுகம்... இதோட ஸ்பெஷல் என்னனு தெரிஞ்சா உடனே ஒன்னு வாங்கிடுவீங்க!
கார்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமிராவை அமேசான் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கார்களுக்கான புதிய கேமிரா ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 'அமேசான் ரிங் கார் கேம்' என குறிப்பிடப்படும் இந்த கேமிரா அவசர காலங்களில் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை குரல் கட்டளை மூலம் இயக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்த கேமிராவை பிரபல ரிங் நிறுவனத்துடன் இணைந்தே அமேசான் தற்போது களமிறக்கியிருக்கின்றது. இது ஓர் செக்யூரிட்டி கேமிராக்களைத் தயாரிக்கும் நிறுவனம். குறிப்பாக, வீடுகளுக்கு தேவையான அதி நவீன செக்யூரிட்டி கேமிராக்களை இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகின்றது.

இந்த நிலையிலேயே அமேசான் உடன் இணைந்து கார்களுக்கான புதிதாக அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய கேமிராவை அது தயாரித்துள்ளது. இந்த கேமிரா மூலம் மிக சுலபமாக அனைத்தையும் பதிவு செய்ய முடியும். குறிப்பாக, குரல் கட்டளை மூலம், உடனடியாக நிகழ்நேர சம்பவங்களை பதிவு செய்ய முடியும்.

சாலையில், திடீரென போலீஸாரால் மடக்கப்பட்டால், "அலெக்சா, நான் இழுக்கப்படுகிறேன்" (Alexa, I'm getting pulled over) என ஆங்கிலத்தில் கூறினால் போதும் அது உடனடியாக நிகழ்நேர சம்பவங்கள் அனைத்தையும் பதிவு செய்ய தொடங்கிவிடும்.

அதுமட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட நெறுங்கிய வட்டாரங்களுக்கு உடனடியாக இதுகுறித்த தகவலையும் அனுப்பி வைத்துவிடும். இதுபோன்ற பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் புதிய அமேசான் ரிங் கேமிராவில் இடம் பெற்றிருக்கின்றன. இதில், வீடியோ மற்றும் ஆடியோ ஆகியவற்றையும் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, ஆடியோவுடன் கூடிய வீடியோவை நம்மால் ரிங் கார் கேமிராவில் பதிவு செய்ய முடியும். மேலும், இதனை தனிப்பட்ட கிளவுட் கணக்கு மூலம் மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைக்கவும் முடியும். இதுமட்டுமின்றி, ரிங் கேமிராவில் சென்சார் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் அனைத்து நிலைகளையும் கண்கானிக்கும்.

குறிப்பாக, கார் விபத்தையோ அல்லது சிறு மோதலையோச் சந்தித்தால் அதுகுறித்த தகவலையும் உடனடியாக குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கும் என கூறப்படுகின்றது. இதை தேவைக்கேற்ப நம்மால் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே சென்சார்தான் காரையும் திருட்டில் இருந்து பாதுகாக்க உதவுகின்றதாம்.

இந்த பல்வேறு சிறப்பு வசதிகளைக் கொண்ட கேமிராவிற்கு அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 200 என நிர்ணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 14 ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும். இந்த அதிகபட்ச விலையுடைய கேட்ஜெட்டைதான் அமேசான் நிறுவனம் அண்மையில் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகப்படுத்தியது.

இந்த புதிய தொழில்நுட்ப கருவியின் அறிமுகத்திற்கு பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரங்கேறிய கருப்பின இளைஞரின் உயிரிழப்பு சம்பவமே முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. ஆம், மினியா போலீஸாரின் அத்துமீறலால் ஜார்ஜ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவமே இந்த தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

போலீஸாரின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதன் காரணத்தால் குறிப்பிட்ட சில மக்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். அவர்களைப் புதிய ரிங் கார் கேமிரா பாதுகாக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அமேசான் ரிங் கார் கேமிராவால் போலீஸாரின் அத்துமீறல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பு: 6 முதல் 10 வரையிலான புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.


Click it and Unblock the Notifications








