புத்தகம் படிக்கும் ஆசை இல்லாதவர்களைக்கூட இந்த நூலகம் கவரும்... ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த புகைப்படம்!
இந்தியா தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மஹிந்திரா நடமாடும் நூலகம் பற்றிய புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அப்படம் தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்புடன் செயல்படும் இந்திய தொழிலதிபர்களில் முதன்மையானவர் ஆனந்த் மஹிந்திரா. மஹிந்திரா மற்றும் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான இவர், விசித்திரமான பதிவுகளுக்கு உடனடியாக ரியாக்ட் செய்துவிடும் நபராக இருக்கின்றார். தன்னை விமர்சித்து, கிண்டலடித்து பதிவிடப்படும் பதிவுகளுக்குகூட அவர் உடனடியாக பதிலை முன் வைத்து வருகின்றார்.

இம்மாதிரியான சூழ்நிலையில் தற்போது தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். அது ஓர் நடமாடும் நூலகத்தின் புகைப்படம் ஆகும். இதுகுறித்த புகைப்படத்தையே தன்னை பின்தொடர்பவர்கள் அறிந்துக்கொள்ளும் விதமாக ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருக்கின்றார்.

இந்த வித்தியாசமான நடமாடும் நூலகத்தை இணையவாசி ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின், லூதியானாவில் கண்டெடுத்திருக்கின்றார். அவர் பகிர்ந்த புகைப்படத்தின் அடிப்படையிலேயே ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்ட சில வாசங்களுடன் அதனைப் பகிர்ந்துள்ளார்.

அவர் பதிவிட்டதாவது, "பொலிரோவிடமிருந்து புத்தகங்கள். இது பாராட்டுக்குரிய 'ஆஃப்-ரோடு' மாற்றம். இதனை எனது நண்பர் மின்னீ, லூதியானவில் இருந்து பகிர்ந்திருக்கின்றார். உலகம் டிஜிட்டல் மயமாகி வருகின்றநிலையில் மக்களை புத்தகங்களை நோக்கி நகர்த்தும் வகையில் ஹர்ஜிந்தர் சிங் இந்த சேவையை செய்து வருகின்றார். இந்த நடமாடும் நூலகம் குரு கோபிந்த் சிங் ஆய்வு வட்டத்திற்கு சொந்தமானது" என அதில் கூறியிருக்கின்றார்.

குரு கோபிந்த் சிங் ஸ்டடி சர்கிள் ஓர் கல்வி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே மக்களை புத்தகங்களின் பக்கம் ஈர்க்கும் விதமாக நடமாடும் நூலகத்தை வலம் வர செய்திருக்கின்றது. இதற்காக பொலிரோ நிறுவனத்தின் பிக்-அப் டிரக்கை அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அதில், புத்தங்களை அடுக்கி வைக்கும் விதமாக சில மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றனர். புத்தகங்கள் மிக தெளிவாக தெரியும் வகையில் கண்ணாடி ரேக்குகள் அதில் நிறுவப்பட்டிருக்கின்றன.

அந்த வாகனத்தில், பண்டைய கால வரலாற்று சிறப்புகளைப் போற்றும் விதமான புத்தகங்களே அதிகம் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தின் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் மதம் சார்ந்த புத்தங்களே அதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த வாகனத்தின் மிக முக்கியமான நோக்கமே, செல்போனில் படிக்கும் பழக்கத்தைக் குறைத்து புத்தகத்தின் வாயிலாக படிக்கும் பழக்கத்தைத் தூண்டச் செய்வதே ஆகும்.

மேலும், புத்தகங்களை விற்பனைச் செய்யும் நோக்கிலும் இந்த வாகனம் சாலைகளில் வலம் வந்த வண்ணம் இருக்கின்றது. அவ்வாறு வலம் வந்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களே தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதையே ஆனந்த் மஹிந்திரா தனது நண்பர் தனக்கு பகிர்ந்ததன் அடிப்படையில் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்ததை அடுத்து தற்போது நடமாடும் நூலகத்தின் படம் அதிக வேகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. பலர் அந்த வாகனத்தை இயக்குபவரையும், கல்வி நிறுவனத்தையும் பாராட்டத் தொடங்கியிருக்கின்றனர். பொதுவாக, இந்தியாவில் வாகனத்தை மாடிஃபை செய்வது என்பது மோட்டார் வாகன விதிகளின்படி அபராதத்திற்குரிய தண்டனை ஆகும்.

ஆனால், நூலகமாக மாறியிருக்கும் பொலிரோ வாகனத்தை நெட்டிசன்கள் சிலர் உன்னதமான மாற்றமாக பார்க்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனந்த் மஹிந்திரா, இதுபோன்ற வித்தியாசமான பதிவுகளை பகிர்வதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல், சில நேரங்களில் தனித்துவமான செயலில் ஈடுபடுவதையும் தனது ஸ்டைலாக கொண்டிருக்கின்றார்.

அந்தவகையில், அண்மையில் இணையத்தில் வைரலாகிய வீடியோவிற்கு பதிலளிக்கும் விதமாக ஏழை விவசாயி ஒருவருக்கு பல லட்சம் மதிப்புள்ள டிராக்டரை அன்பளிப்பாக வழங்கினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications








