தரமான காரியத்தை செய்த இந்திய ரயில்வேஸ்! கெத்து காட்டாமல் நன்றி கூறிய இந்தியாவின் மாபெரும் தொழிலதிபர்
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இந்திய ரயில்வே துறைக்கு நன்றிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும் ரயில்வே துறைக்கு டுவிட்டர் பதிவின் வாயிலாக நன்றி தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்திரா குழுமம் இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், பங்களாதேஷ் நாட்டிலும் தனது வாகனங்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. இங்கு விற்பனைச் செய்வதற்கான மஹிந்திரா பொலிரோ கார்களை இந்திய ரயில்வேத் துறையின் மூலம் மஹிந்திரா நிறுவனம் அண்மையில் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த சேவைக்கே ஆனந்த் மஹிந்திரா தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் இந்திய ரயில்வே துறைக்கு தெரிவித்துள்ளார். 'மேட் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்த கார்கள் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றது.

எனவே, மும்பை நகரத்தில் இருந்தே மஹிந்திராவின் அனைத்து பொலிரோ எம்பிவி கார்களும் பங்களாதேஷ்-க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த கார்கள் அனைத்தும் பங்களாதேஷின் பெனபோல் எனும் பகுதியில் இறக்குமதிச் செய்யப்பட இருக்கின்றன. இதற்காக கணிசமான எண்ணிக்கையில் மஹிந்திரா கார்கள் ரயில் பெட்டியில் ஏற்றி, அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவ்வாறு, மஹிந்திரா கார்கள் ரயில் பெட்டியில் ஏற்றப்படும் வீடியோவைப் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா அத்துடன், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் டேக் செய்துள்ளார். மேலும், "பம்பையா பொலிரோக்கள் பங்களாதேஷின் பெனபோலுக்கு செல்கின்றன. எனக்கு இந்த ஒலி மிகவும் பிடித்துள்ளது. இந்திய ரயில்வே துறைக்கு நன்றி..." என கூறியுள்ளார்.

முன்னதாக இதே வீடியோவை இந்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சகம் ஆகியோர் டுவிட்டர் மற்றும் முகப்புத்தகம் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அவர்கள் பதிவிட்டதன்படி, நவி மும்பையில் இருந்து 87 பிக்-அப் வேன்கள் பங்களாதேஷுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் மட்டுமின்றி நாட்டின் பிற வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்க ரயில் வழித் தடத்தையேப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, மாருதி சுசுகி, ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் பெரும்பாலான ஏற்றுமதி பணிக்கு இந்திய ரயில்வேத்துறையையேப் பயன்படுத்தி வருகின்றன.
பொதுவாக வாகனங்களை ஓரிடத்தில் மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைக்க கன்டெய்னர் லாரிகளே அதிகம் பயன்படுத்தப்படும். இது சற்று கூடுதலான செலவை வழங்கக்கூடியது. மேலும், அதிக நேரத்தையும் எடுத்துக் கொள்ளும். இதற்கு அப்படியே எதிரானது ரயில் வழி பயணம். இதில் வாகனங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரியளவில் செலவை மிச்சப்படுத்த முடியும்.

மேலும், நேரத்தையும் சேமிக்க முடியும். எனவேதான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் புதிய வாகனங்களை ரயில் பெட்டிகள் மூலம் உள் நாடு மற்றும் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றன. இந்த சேவையின் பக்கம் நிறுவனங்களைக் கவர வேண்டும் என்பதற்காக இந்திய ரயில்வேத்துறை பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. எனவேதான் கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது ரயில் மூலம் வாகனங்களை அனுப்பி வைக்கும் செயல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, மாருதி சுசுகி நிறுவனம் மட்டும் 2019-2020 வரை 1.78 லட்சம் வாகனங்களை இந்திய ரயில்வேத்துறை வாயிலாக அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று, ஆந்திர மாநிலத்தில் உற்பத்தி ஆலையைக் கொண்டிருக்கும் கியா நிறுவனமும் அதன் செல்டோஸ் மற்றும் சொனெட் எஸ்யூவி கார்களை ஆயிரக் கணக்கில் ஏற்றுமதி செய்திருக்கின்றது. அண்மையில் கியா நிறுவனம் சொனெட் கார்களை ரயில் பெட்டி வாயிலாக நாட்டின் பிற பகுதிக்கு அனுப்பி வைத்தது. அப்போது வைரலாகிய புகைப்படம் மற்றும் தகவலை அறிந்துக் கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








