டாடாவிற்கு ஆந்திரா கொடுத்த மிகப்பெரிய ஆர்டர்! மீண்டும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்த ஜெகன்...
ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் மீண்டும் ஒட்டுமொத்த இந்திய மக்களையுமே திரும்பி பார்க்க வைக்கின்ற வகையில் ஓர் தரமான சம்பவத்தை நிகழ்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர்சிபி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இவர், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாள் முதல் அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பிற மாநில மக்களைப் பொறாமைக் கொள்ளும் வகையில் சிறப்பு திட்டங்கள் ஆந்திராவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையுமே திரும்பி பார்க்க வைக்கின்ற வகையில் ஓர் தரமான சம்பவத்தை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, தன் மாநில மக்களின் பயன்பாட்டிற்காக டாடா மோட்டார்ஸின் ஏஸ் கோல்ட் (குட்டி யானை) வணிக வாகனத்தைக் கொள்முதல் செய்ய ஆர்டரைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

இதற்காக 6,413 யூனிட் டாடா ஏஸ் கோல்ட் வணிக வாகனங்களுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் மாநில மக்களின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யப் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நேற்றைய (வெள்ளிக்கிழமை) தினம் பெற்றதாக தகவல் வெளியிட்டுள்ளது.

ஆந்திர அரசு ஆன்லைன் வாயிலாக நடத்திய இ-ஏலத்தில் சிறந்த ஏலதாரராக உருவெடுத்ததன் அடிப்படையில் டாடாவிற்கு இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளு. இந்த ஏலத்தில் நாட்டின் பிற முன்னணி நிறுவனங்களும் கலந்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், டாடாவிற்கே இந்த அரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனால், மிகப்பெரிய ஆர்டரை தன் வசம் சேர்த்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலான உடல் அமைப்புடன் டாடா ஏஸ் கோல்டு வாகனத்தை உருவாக்கும் பணியில் டாடா களமிறங்கியிருக்கின்றது. அதாவது, முழுமையாக கட்டப்பட்ட உடல் பகுதியுடன் ஏஸ் கோல்டு வாகனத்தை ஆந்திர அரசுக்காக அது தயார்படுத்தி வருகின்றது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ், எஸ்சிவி மற்றும் பியூ பிரிவுகளின் துணைத் தலைவர் வினய் பதக் கூறியதாவது, "ஆந்திரப் பிரதேச சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வரை நாங்கள் வென்ற மிக மதிப்புமிக்க ஆர்டர்களில் இதவும் ஒன்றாகும்" என பெறுமிதம் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் தனிப்பயனாக்கப்பட்ட, முழுமையாக கட்டப்பட்ட ஏஸ் கோல்ட் மினி லாரிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வாகனங்களின் விரிவான பராமரிப்பிலும் உதவ இருக்கின்றோம்" என்றார். டாடா ஏஸ் கோல்டு உடல் கட்டமைப்பு பணியை வேறொரு நிறுவனத்துடன் இணைந்தே டாடா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுவே, ரேஷன் பொருட்களை ஏற்றிச் செல்லும் உடல் மற்றும் பொருளை அளிவட்டு வழங்கும் கருவி உள்ளிட்டவற்றை ஏஸ் கோல்டு வாகனத்தில் நிலை நிறுத்த இருக்கின்றன. இந்த செயல்பாட்டிற்கு பின்னரே அது முழுமையான பொருட்களை விநியோகம் செய்யக்கூடிய மொபைல் வாகனமாக மாறும்.

தற்போது, டாடா நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் மட்டுமே ஏஸ் கோல்டு வாகனத்தை விற்பனைச் செய்து வருகின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நிலவி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே ஆந்திர அரசு தங்களின் மக்கள் சேவையில் கோல்ட் ஏஸ் வாகனங்களை இணைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது டாடா ஏஸ் கோல்ட் வாகனங்கள் டீசல், பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்துமே பிஎஸ்6 தரத்தில் மட்டுமே கிடைக்கின்றன. டாடாவின் மக்கள் நம்பிக்கைப் பெற்ற வாகனங்களில் இதுவும் ஒன்று. எனவேதான் பல ஆண்டுகளைக் கடந்தும் இந்த வாகனம் இந்திய சாலைகளில் தடையில்லா பயணத்தை மேற்கொண்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








