இந்தியாவில் 5வது டயர் ஆலையை திறந்தது அப்போலோ!
இந்தியாவில் புதிய டயர் ஆலையை திறந்துள்ளது அப்போலோ நிறுவனம். இந்த ஆலையில் டயர் உற்பத்திப் பணிகளும் முறைப்படி துவங்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக அப்போலோ டயர்ஸ் நிறுவனம் உள்ளது. அனைத்து ரக வாகனங்களுக்கும் டயர்களை அப்போலோ நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மேலும், வாகன உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் டயர்களை சப்ளை செய்து வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே 4 டயர் ஆலைகளுடன் இந்தியாவில் டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அப்போலோ நிறுவனம் தற்போது 5வது ஆலையையும் இந்தியாவில் திறந்துள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னபன்டுரு என்ற கிராமத்தில் புதிய டயர் ஆலையை அப்போலோ அமைத்துள்ளது.இந்த ஆலையில் நேற்று முதல் டயர் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களுடன் பசுமை ஆலையாக இது அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையானது 256 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் கட்டமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.3,800 கோடி வரை முதலீடு செய்வதற்கு அப்போலோ திட்டமிட்டுள்ளது.

இந்த ஆலையில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் டயர் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்படும். வரும் 2022ம் ஆண்டு முழுமையான உற்பத்தி திறனுடன் இயங்கும் என்று அப்போலோ தெரிவித்துள்ளது.

இந்த பசுமை ஆலை நாள் ஒன்றுக்கு 15,000 கார் டயர்களையும், 3,000 டிரக் மற்றும் பஸ்களுக்கான ரேடியல் டயர்களையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

ஹரியானா மாநிலம் குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அப்போலோ டயர் நிறுவனத்திற்கு உலக அளவில் 7 டயர் ஆலைகள் உள்ளன. அதில், 5 டயர் ஆலைகள் இந்தியாவில் உள்ளன. நெதர்லாந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் தலா ஒரு டயர் உற்பத்தி ஆலைகள் உள்ளன.

அப்போலோ டயர் நிறுவனத்தில் 16,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் விதத்திலும், குறித்த நேரத்தில் சப்ளை செய்யும் வகையிலும் இந்த ஆலையை அமைத்துள்ளது அப்போலோ டயர் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








