கொரோனா எதிரொலி: பொதுமக்களுக்காக பேருந்துகளில் அதிரடி மாற்றம் செய்த ஜெகன் மோகன் ரெட்டி..!
கொரோனா வைரஸ் எதிரொலியால் பொதுபோக்குவரத்துத்துறைக்கு சொந்தமான பேருந்துகளில் அதிரடி மாற்றங்களை ஆந்திர அரசு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக இடைவெளி கடைபிடித்தால் மட்டுமே பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்ற ஒழுக்க பாடத்தை உலக மக்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளது ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா.
முன்பெல்லாம் மது விற்பனை நிலையங்கள் தொடங்கி ரேஷன் கடைகள் வரை எங்கு பார்த்தாலும் கூட்டம், நெரிசல் என ஒழுங்கற்ற நிலையேக் காணப்பட்டு வந்தது.

ஆனால், அண்மைக் காலங்களாக இந்த நிலை அப்படியே தலை கீழாக மாறியிருக்கின்றது. இப்போது பால் வாங்குவது முதல் காய்கறி வாங்குவது வரை ஒருவருக்கு ஒருவர் இடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகின்றது.
இதுமட்டுமின்றி, பொதுவெளியில் அநாகரிமாக எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பது போன்ற சில அருவருக்கத்தக்க செயல்கள் குறைந்திருக்கின்றது.

இவையனைத்திற்கும் உலக நாடுகள் அனைத்தையும் தனது கோரப்பிடியால் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதன் பிடியில் இருந்து மக்களைக் காக்க வேண்டும் என்பதற்காக பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில், ஆட்சிக் காலம் தொடங்கியது முதலே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன், தற்போது மக்களை கொரோனா வைரசின் பாதிப்பில் இருந்து காக்கும் விதமாக முன்னோடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

அதாவது மாநிலத்தின் பொதுபோக்குவரத்து கழகமான ஏபிஎஸ்ஆர்டிசி பேருந்துகளில் சமூக இடைவெளிக்கான மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார். இதனால், இதுவரை எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத வகையிலான அமைப்புடைய பேருந்துகளாக எஸ்ஆர்டிசி பொது பேருந்துகள் மாறியிருக்கின்றன.

ஆம், அவை தனி நபர் இடைவெளி உறுதிச் செய்கின்ற வகையில், ஒரு வரிசைக்கு மூன்று நபர் இருக்கை மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாக அறவித்திருந்தார். முன்பெப்போதும் இல்லாத வகையில் அதிக பாதுகாப்பு மற்றும் கட்டுபாடுகளுடன் அவை வரவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்தே, தனி மனித இடைவெளியை நிரூபிக்கின்ற வகையில் ஏபிஎஸ்ஆர்டிசி தற்போது மாதிரி பேருந்துகளைத் தயார் செய்திருக்கின்றது. இதற்கான வரைமுறைகள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் ஒப்புதல் வழங்கியவுடன் தற்போது முன்மாதிரி மாடல்களாக தயார் செய்யப்பட்டிருக்கும் பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.

ஆரம்பகட்ட முயற்சியாக 36 இருக்கைகளைக் கொண்ட பேருந்துகள் 26 இருக்கைகளைக் கொண்ட பேருந்துகளாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்த பேருந்துகளுக்கான கட்டணத்தை ரொக்கமல்ல முறையில் வசூலிக்கவும் ஆந்திர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

சமூக இடைவெளிக்க மாற்றப்பட்ட பேருந்தின் புகைப்படம்.
மாநிலத்தில் கோவிட்-19 வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் 25ம் தேதி அன்றிலிருந்து பொதுபோக்குவரத்து ஆந்திராவில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தகுந்தது. இதனால், பலர் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் சொந்த மாநிலங்களிலேயே அகதிகளாக மாறியிருக்கின்றனர். இந்த நிலை வருகின்ற 18ம் தேதிக்கு பின்னர் நீடிக்காது என தெரிகின்றது. ஏனெனில், ஆந்திராவில் வரும் 17ம் தேதிக்கு லேசான தளர்வு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதைத்தொடர்ந்து, மாநிலம் இயக்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளை தனி நபர் இடைவெளிக் கடைபிடிக்கும் வகையில் மாற்ற இருப்பதாக அம்மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மாற்றப்படும் பேருந்துகள் அனைத்தும் சூப்பர் லக்சூரி ரக வாகனங்கள் ஆகும். இவை, மே18ம் தேதிக்குள் மாற்றப்பட்டு பயன்பாட்டிற்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆந்திர போக்குவரத்துத்துறையின் இந்த நடவடிக்கையால் அம்மாநில போக்குவரத்துத்துறைக்கு பேரிழப்பு நேரிடலாம். ஆனால், இதைக் காரணமாக எடுத்துக் கொண்டு பேருந்து கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்போவதில்லை என ஆந்திர போக்குவரத்துத்துறை அமைச்சர் பெர்னி வெங்கட்ராமையா தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பொதுமக்கள் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








