ஆடி ஏ3 மற்றும் க்யூ3 கார்களின் விற்பனை இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தம்... காரணம் இதுதான்...
ஆடி நிறுவனம் ஏ3 மற்றும் க்யூ3 மாடல்களின் பெயர்களை தனது அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடி நிறுவனம் தற்போது தனது இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ள க்யூ3 மாடல் தான் அதிக அளவில் விற்பனையாகும் காராகாவும், ஏ3 மாடல் தான் மிகவும் மலிவு விலை காராகவும் அதன் போர்ட்ஃபோலியோ லைன்அப்-ல் உள்ளன.

இருப்பினும் இவற்றின் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு காரணம் இவற்றின் பிஎஸ்6 மாடல்கள் இன்னும் தயார் நிலையில் இல்லை. புதிய மாசு உமிழ்வு விதி கடந்த 1ஆம் தேதி இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் முடிந்தவரை அனைத்து பிஎஸ்4 வாகனங்களையும் விற்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த வகையில் ஆடி நிறுவனம் தன்னிடம் கிடப்பில் இருந்த அனைத்து பிஎஸ்4 வாகனங்களையும் விற்று தீர்த்துவிட்டது. மேலும் தனது தயாரிப்புகளையும் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யும் பணிகளையும் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஆனால் இந்த அப்டேட் பணிகள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஆடி ஏ3 கார் இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ப்ரீமியம் ப்ளஸ் & டெக்னாலஜி என்ற இந்த இரு வேரியண்ட்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டு இருந்தன. இதில் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 143 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்த டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்தது. ஆடி ஏ3 மாடலின் பெட்ரோல் வேரியண்ட்டில் வழங்கப்பட்டு வந்த 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வந்தது.

ஆடி க்யூ3 மாடலிலும் இதே என்ஜின் தேர்வுகள் தான் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இந்த என்ஜின்கள் இந்த காரில் வித்தியாசமான ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்தன. இந்த வகையில் 1.4 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் என்ஜின் 148 பிஎச்பி வரையும், 250 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது.

2.0 லிட்டர் டிடிஐ என்ஜின் இரு விதமான ட்யூன்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் குறைந்த ட்யூன் அளவாக 150 பிஎச்பி மற்றும் 340 என்எம் டார்க் திறனும், அதிகப்பட்ச ட்யூன் அளவாக 184 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க் திறனும் வழங்கப்பட்டு வந்தன.

ஏற்கனவே கூறியதுபோல் தற்போது விற்பனை நிறுத்தப்பட்டுள்ள ஏ3 மற்றும் க்யூ3 மாடல்கள் தான் ஆடி நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாடல்களில் விலை குறைவான கார்களாகும். இருப்பினும் இவற்றின் பிஎஸ்6 வெர்சன்கள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. இதற்கு கொரோனா வைரஸ் தான் மிக முக்கியமான காரணமாக உள்ளதால் தற்சமயம் நிலவும் இக்கட்டான சூழ்நிலை சரியானவுடன் இந்நிறுவனத்தில் இருந்து சந்தைக்கு வரும் முதல் பிஎஸ்6 மாடல்களாக இவை தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications








