மக்களுக்கு நாலே கால் லட்ச ரூபாய் கொடுக்கும் ஆஸ்திரியா அரசு... எதுக்குனு தெரிஞ்சா பொறாமைப்படுவீங்க...
ஆஸ்திரிய அரசு அந்நாட்டு மக்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 4.25 லட்ச ரூபாயை வழங்க முடிவு செய்துள்ளது.

உலகின் அனைத்து நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் மூலம் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்பதுடன், பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கலாம் என்பதும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

இதன் மூலம் பொருளாதார ரீதியிலான நன்மைகள் கிடைக்கும். ஆனால் விலை கொஞ்சம் அதிகம் என்பதால், எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல்லே இதுதான். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் மக்களுக்கு பண உதவிகளை உலக நாடுகள் வழங்க தொடங்கியுள்ளன.

இந்த வரிசையில் எலெக்ட்ரிக் கார்களை வாங்கும் பொதுமக்களுக்கு, 5,000 யூரோக்கள் பண உதவியை வழங்க ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. இது ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் ஒரு நாடாகும். 5,000 யூரோக்கள் என்பது இந்திய மதிப்பில் தோராயமாக 4.25 லட்ச ரூபாய் ஆகும். அடுத்த மாதத்தில் இருந்து இந்த உதவியை வழங்குவதற்கு ஆஸ்திரியா முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் லியோநோரே ஜீவெஸ்லர் கூறியுள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரியாவில் எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாடு அதிகரித்து, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆஸ்திரிய அரசின் இந்த முடிவு குறித்த தகவலை அமைச்சர் லியோநோரே ஜீவெஸ்லர் இன்றுதான் (ஜூன் 29ம் தேதி) வெளியிட்டார்.

இதுதவிர சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை மும்மடங்காக உயர்த்த இருப்பதாகவும் லியோநோரே ஜீவெஸ்லர் தெரிவித்துள்ளார். விலைக்கு அடுத்தபடியாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதில் இருக்கும் இரண்டாவது பெரிய தடைக்கல் இது. பெட்ரோல் பங்க்குகளுக்கு நிகராக சார்ஜிங் ஸ்டேஷன்கள் இல்லை என்பதாலும், மக்கள் எலெக்ட்ரிக் கார்களை வாங்க தயங்குகின்றனர்.

எனவேதான் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை மும்முடங்காக உயர்த்த ஆஸ்திரிய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரியா மட்டுமல்லாது, ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த மற்ற நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க தேவையான பல்வேறு அறிவிப்புகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில், எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு நேரடியான 'கேஷ் பெனிஃபிட்', மானியம் மற்றும் மின்சார வாகன உற்பத்தியாளர்களுக்கு வரிச்சலுகைகள் ஆகியவை அடங்கும். இதன்படி பெட்ரோல், டீசல் கார்களை கொடுத்து விட்டு, எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்களுக்கு, இந்திய மதிப்பில் சுமார் 5.70 லட்ச ரூபாயை வழங்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் ஜெர்மனி அரசோ, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும், சார்ஜிங் ஸ்டேஷன் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளின் இத்தகைய நடவடிக்கைகள் மூலம், எதிர்கால உலகை எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஆளப்போகின்றன என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








