வாகன உற்பத்தி மீண்டும் துவங்குவதற்கு அனுமதி கிட்டுமா?... எதிர்பார்ப்புடன் வாகன நிறுவனங்கள்
ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில், கார், பைக் உள்ளிட்ட வாகன ஆலைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா பிரச்னையால் போடப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா பரவும் வேகம் அதிகம் இருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றி பிரதமர் மோடி, வரும் மே 3ந் தேதி வரை தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

இதனால், மக்களின் இயல்பு நிலை தொடர்ந்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்கு இதைவிட வேறு சிறந்த வழி இல்லாத நிலையில், இது அத்தியாவசியமாகவே பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், தேசிய ஊரடங்கு காரணமாக, அனைத்து விதமான தொழிற்துறைகளும் முடங்கியிருப்பதால், பொருளாதாரத்தில் பெரிய அளவிலான இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.

இந்த நிலையில், தொழிற்துறையினர் சந்தித்து வரும் இழப்புகளை ஓரளவு தவிர்க்கும் விதத்தில், அத்தியாவசிய பட்டியலில் இல்லாத 16 துறைகளை சேர்ந்த ஆலைகளை இயங்குவதற்கு அனுமதி வழங்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை செயலர் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், உணவு, மருந்து உற்பத்தி, விவசாயம், அத்தியாவசிய சேவைகள் துறைகளை தவிர்த்து, ஆட்டோமொபைல் உள்பட பிற தொழிற்துறை சார்ந்த ஆலைகளை நிபந்தனையுடன் இயக்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

அதாவது, கொரோனா தடுப்புக்கான வழிகாட்டு முறைகளை பின்பற்றி ஆலைகளை இயக்க அனுமதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலை வளாகத்தில் கிருமி நாசினி தெளிப்பு, பணியாளர்கள் இடையே சமூக இடைவெளி முறையை பின்பற்றுதல், முக கவசம் அணிவது மற்றும் கிருமி நாசினி திரவத்தை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் முறைகளை பின்பற்றி பணிகளை செய்வதற்கு வழிகாட்டு முறைகளை கொடுத்து உற்பத்திப் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு அனுமதிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 சதவீத உற்பத்தி இலக்குடன் ஒரே ஷிஃப்ட்டில் உற்பத்தியை துவங்குவதற்கு அனுமதிக்கலாம். ஆலைக்குள் பணியாளர்கள் இடையே போதிய சமூக இடைவெளி இருப்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். பணியாளர்கள் போக்குவரத்திற்கு ஆலை நிர்வாகம் தனி கவனம் செலுத்துவதும் அவசியம் உள்ளிட்ட நடைமுறைகளுடன் இந்த விலக்கு கோரப்பட்டுள்ளது.

கொரோனா நிலைமையை பொறுத்து படிப்படியாக ஆலையில் உற்பத்தியை அதிகரிக்க அனுமதி வழங்கலாம். இதனால், வேலைவாய்ப்பு பறிபோகும் பிரச்னை மற்றும் பொருளாதார இழப்புகளை ஓரளவு சரிகட்டுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு இதுவரை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பதில் வரவில்லை. இருப்பினும், இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றியபோது, இரண்டாம் கட்ட தேசிய ஊரடங்கு காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து நாளை வழிகாட்டு முறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், கார், பைக் உள்ளிட்ட ஆலைகள் நிபந்தனைகளுடன் மீண்டும் உற்பத்தியை துவங்குவதற்கான அனுமதி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரும் 20ந் தேதிக்கு பின்னர் நிலைமை மேம்பட்டால், உற்பத்திப் பணிகளில் அதிக அளவில் முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

இதனிடையே, அத்தியாவசியப் பட்டியலில் இல்லாத 16 வகையான ஆலைகளில் உற்பத்திப் பணிகளை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி கேட்டு உள்நாட்டு வணிக மேம்பாட்டுத் துறை அனுப்பியுள்ள கடிதத்திற்கு பாமக இளைஞரணித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி, நாளை முதல் உற்பத்தியை சிறிய அளவில் துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. எனினும், அரசு வழிகாட்டுதல் முறையின்படி இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதேபோன்று, அனைத்து வாகன நிறுவனங்களும், அரசின் அனுமதிக்காக ஆவலோடு காத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications








