கொரோனா அச்சத்தால் கார், பைக் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்!
கொரோனா வைரஸ் பிரச்னையால், கார், பைக் ஆலைகளை பல முன்னணி நிறுவனங்கள் தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால், உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக கொரோனா வைரஸ் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனை மனதில் வைத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க ஒரே வழி, சுய தனிமைப்படுத்துதல் முறையே சிறந்த தீர்வாக உள்ளது. எனவே, அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின்படி, அனைத்து வர்த்தக ஸ்பானங்கள், ஆலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டு வருகின்றன.

தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, இந்தியாவில் செயல்பட்டு வரும் பெரும்பாலான முன்னணி கார், பைக் நிறுவனங்களின் ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி தனது கார் ஆலைகளை தற்காலிகமாக மூடி உள்ளது. டெல்லி அருகே உள்ள குர்கான் மற்றும் மானேசர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மாருதி கார் ஆலைகள் கால வரையின்றி உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ரோதக் பகுதியில் உள்ள மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திலும் பணிகள் நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், குஜராத்தில் உள்ள மாருதி கார் உற்பத்தி ஆலையானது சுஸுகி நிறுவனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அதுகுறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை இல்லை.

சென்னையில் உள்ள ஃபோர்டு கார் ஆலையிலும் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, சென்னையில் உள்ள ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் கார் ஆலையிலும் உற்பத்தி காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் மஹாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் உள்ள தனது ஆலைகளை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மூடி வைத்துள்ளது. இதேபோன்று, மஹிந்திரா வாகன உற்பத்தி நிறுவனமும் ஆலையை மூடி வைத்துள்ளது.

நாக்பூர், கண்டிவாலி, சகன் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தனது ஆலைகளில் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மஹிந்திரா வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா கார் நிறுவனமும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா மற்றும் ராஜஸ்தான் மாநிலம், தபுகெராவில் செயல்பட்டு வரும் கார் ஆலைகளை வரும் 31ந் தேதி வரை மூடுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்திலும் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது. எனவே, அம்மாநில தலைநகர் பெங்களூர் அருகே செயல்பட்டு வரும் டொயோட்டா கார் ஆலையிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை பொறுத்து மறு அறிவிப்பு வெளியிடும் வரை கார் ஆலையை மூடுவதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது ஆலைகளில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனமும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கார் ஆலையில் உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக வாகன நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோன்று, பிற நிறுவனங்களும் கார் ஆலைகளை மூடுவது குறித்து பரிசீலித்து வருகின்றன. கார் ஆலைகளில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றுவதால் கொரோனா எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதால், இந்த முடிவை கார் நிறுவனங்கள் எடுத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








