பிஎஸ்4 வாகன விற்பனையை நீடிக்க உச்ச நீதிமன்றத்தை நாடிய டீலர்கள் கூட்டமைப்பு!
கொரோனா வைரஸ் பிரச்னையால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, பிஎஸ்4 வாகன விற்பனைக்கான காலக்கெடுவை நீடித்து தருமாறு உச்சநீதிமன்றத்தில் டீலர்கள் கூட்டமைப்பு மனுதாக்கல் செய்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பிரச்னை பூதாகரமாக மாறி இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், பிஎஸ்4 வாகனங்களின் விற்பனைக்கான காலக்கெடு வரும் 31ந் தேதியுடன் முடிகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால், வாகன விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது.

இந்த அசாதாரணமான சூழலை மனதில் வைத்து பிஎஸ்4 வாகன விற்பனைக்கான காலக்கெடுவை நீடித்து தருமாறு அகில இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் கடந்த சில நாட்களாக வாகன விற்பனையானது 60 முதல் 70 சதவீதம் சரிந்துவிட்டதாகவும், நடப்பு வர்த்தகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை வரும் 31ந் தேதிக்குள் விற்பனை செய்வது கடினமாக இருக்கும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அறிவுறுத்தல்களின்படி, டீலர்களில் விற்பனை செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும் பல டீலர்கள் முடிவு செய்துள்ளதால், பல டீலர்கள் நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது.

மேலும், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யவில்லை என்றால், பல டீலர்களை நிரந்தரமாக மூடும் நிலைக்கு கூட தள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு வரும் மே 31ந் தேதி வரை இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் அனுமதி வழங்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடந்த மாதமும், பிஎஸ்4 வாகன விற்பனையை நீடித்து தருவதற்காக டீலர்கள் கூட்டமைப்பு அளித்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையை காரணம் காட்டி, காலக்கெடுவை நீடித்து தருவதற்கு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த மனுவை உச்ச நீதிமன்றம் அவசர நிலையாக கருதி விசாரணை செய்து உரிய தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








