பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி திட்டம்... ஆட்டோமொபைல் துறைக்கு கைகொடுக்குமா?
பிரதமர் மோடியின் 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரா ஊக்குவிப்புத் திட்டம் ஆட்டோமொபைல் துறைக்கும் பெரும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எவ்வாறு ஆட்டோமொபைல் துறைக்கு பயன் அளிக்கும் என்பது குறித்த தகவல்களை தொடர்ந்து படிக்கலாம்.

கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான 20 லட்சம் கோடி ரூபாய்க்கான மெகா பொருளாதார தொகுப்புத் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது அறிவித்தார். இதற்கான விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமரின் இந்த அறிவிப்பு தொழிற்துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பாதிப்பால் சிறு மற்றும் நடுத்தர வகை தொழில்களும், பெரும் முதலீட்டு திட்டத்துடன் கூடிய தொழில்களும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த நிறுவனங்கள் பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வகையில் 20 லட்சம் கோடி திட்டம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்து செல்லும் வகையில் பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதனால், உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிகிறது. மேலும், இந்த திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நேரடியாக ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பெரும்பாலான வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனங்கள் பயன் பெறும் வாய்ப்புள்ளது.

இந்த திட்டத்தின்படி, விவசாயிகள், நடுத்தர மக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால, மறைமுறைமாக இருசக்கர மற்றும் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

இது வாகன உற்பத்தி நிறுவனங்களின் பொருளாதார இழப்பை ஈடுகட்ட உதவும். இதுதொடர்பாக, இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின் (சியாம்) தலைவர் ராஜன் வதேரா கூறுகையில்,"பிரதமரின் இந்த 20 லட்சம் கோடி திட்டம் தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கியதாக அமையும். உள்நாட்டு தேவையை அதிகரித்து உற்பத்தியை பெருக்க உதவும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆட்டோமொபைல் துறை இந்தியாவின் மொத்த உற்பத்தியில் முக்கிய பங்களிப்பையும், அதிக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. எனவே, ஆட்டோமொபைல் துறை வளர்ச்சிக்கான சிறப்பு திட்டங்களை பிரதமரின் 20 லட்சம் கோடி திட்டம் குறித்த விரிவான திட்ட அறிவிப்பின்போது மத்திய நிதி அமைச்சர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கிறோம்," என்று கூறி இருக்கிறார்.

பிரதமரின் அறிவிப்பு குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விபின் சொந்தி கூறுகையில்," பிரதமரின் அறிவிப்பு உற்சாகத்தையும், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனினும், திட்டம் குறித்த முழுமையான விபரங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் கோயங்கோ பிரதமரின் பேச்சை மேற்கோள்காட்டி டிவிட்டரில் செய்தியை பதிவு செய்துள்ளார். அதில், வைரஸிடம் பிணயக் கைதியாக இல்லாமல், அதனை முறியடுத்து வாழ வேண்டும். மேலும், உள்நாட்டு பொருட்களை வாங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் பேச்சை சுட்டிகாட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications








