வேலைவாய்ப்பில் ஹரியானா மக்களுக்கு முன்னுரிமை... ஆட்டோமொபைல் துறை கடும் எதிர்ப்பு... ஏன் தெரியுமா?
தனியார் வேலைவாய்ப்புகளில் ஹரியானா மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவிற்கு, ஆட்டோமொபைல் துறையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தனியார் நிறுவனங்களில் ஹரியானாவை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் மசோதாவை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (Automotive Component Manufacturers Association - ACMA), அம்மாநில அரசிடம் கேட்டு கொண்டுள்ளது.

தனியார் தொழிற்சாலைகள் மற்றும் ப்ளூ-காலர் வேலைகளில், ஹரியானாவை சேர்ந்த மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் தனியார் துறை வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் ஹரியானா மாநில மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அம்மாநில அரசு கடந்த நவம்பர் 5ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இதற்கு ஹரியானா மாநில மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் தொழில்துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், இந்த முடிவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தொழில்துறையினர் எச்சரித்துள்ளனர். ஹரியானா மாநிலம் தொழில்துறையில் சிறந்து விளங்கி வருகிறது.

குறிப்பாக அங்கு ஆட்டோமொபைல் துறை சார்ந்த தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஹரியானா மாநில அரசு எடுத்துள்ள முடிவால், ஆட்டோமொபைல் துறை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பலர் எடுத்துரைத்துள்ளனர். இந்த முடிவால் ஏற்படப்போகும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தீபக் ஜெயின் கூறுகையில், ''சர்வதேச சந்தையில் போட்டியிடும் வகையில் உயர்தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்ய எங்கள் தொழிலுக்கு திறமையான ஆட்கள் தேவை. வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் வசிப்பிடத்தை விட தொழிலுக்கு தேவையான திறமை அடிப்படையிலேயே எங்கள் தொழிலில் பணியமர்த்தல் நடைபெறுகிறது.

இது போன்ற நடவடிக்கைகள் மாநிலத்தில் தொழில் செய்வது எளிது என்ற நிலையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாது, தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்ற ஹரியானாவின் பிம்பத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அத்துடன் எதிர்காலத்தில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் பாதிப்புகள் உண்டாகும்'' என்றார்.

ஏற்கனவே குறிப்பிட்டதை போல் ஹரியானா மாநிலத்தில், ஆட்டோமொபைல் துறை சார்ந்த ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக அம்மாநிலத்தில் உள்ள குர்கான்-மனேசர் பிராந்தியம், கடந்த பல வருடங்களாக ஆட்டோமொபைல் துறையின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.

மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் அங்கு இயங்கி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஹரியானா மாநில அரசு எடுத்துள்ள முடிவால் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், ஆட்டோமொபைல் துறையினர் வருத்தமடைந்துள்ளனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








