கொரோனா வைரஸ் அச்சம்: பார்வையாளர்கள் இல்லாமல் நடக்கப்போகும் ஃபார்முலா-1 கார் பந்தயம்!
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பார்வையாளர்கள் இல்லாமல் ஃபார்முலா-1 கார் பந்தயம் நடத்தப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவியிருப்பதால், உலக மக்களை பெரும் பதட்டத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. இதனால், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்குவதில் பெரும் இடர்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல்லாயிரம் பேர் கூடும் பெரும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், வரும் 20,21 மற்றும் 22 தேதிகளில் பஹ்ரைன் நாட்டில் நடக்க இருக்கும் ஃபார்முலா-1 கார் பந்தயத்தை பார்வையாளர்கள் இல்லாமல் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

பந்தயத்தை காண வரும் ரசிகர்கள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த போட்டியில் கார் பந்தய வீரர்கள் மட்டுமே பங்கு கொள்வார்கள். ரசிகர்கள் இல்லாமல் இந்த போட்டி நடத்தப்பட இருக்கிறது.

அதேநேரத்தில், ஃபார்முலா-1 ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் போட்டியை கண்டு ரசிக்கும் விதமாக, வழக்கம்போல் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும்,பஹ்ரைனில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கருதப்படுவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்துப்பட்டு வருவதாகவும் ஃபார்முலா-1 போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, போட்டியை நடத்துவதற்கு அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

"இந்த போட்டியை காண்பதற்கு நூற்றுக்கணக்கானோர் ஆவலோடு இருப்பது தெரியும். பல்வேறு ஊர்களிலிருந்து இந்த போட்டியை காண்பதற்கு பலர் திட்டமிட்டு இருக்கின்றனர். அவர்களது ஆவலை புரிந்து கொள்கிறோம். அதேநேரத்தில், அனைவரின் பாதுகாப்பும் முக்கியம்," என்று பஹ்ரைன் ஃபார்முலா-1 ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைனை தொடர்ந்து அடுத்த மாதம் 17 முதல் 19 தேதி வரை நடக்க இருந்த ஃபார்முலா-1 போட்டியானது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த ஆண்டு ஃபார்முலா-1 போட்டிகள் நடத்துவதில் பல்வேறு சிரமங்களை ஏற்பாட்டாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

ஃபார்முலா-1 பந்தயம் போன்றே, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளது. பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பரிசீலனைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








