கார் கடனுக்கான கூடுதல் வட்டியை திரும்ப வழங்கும் வங்கிகள்!
கொரோனா பிரச்னை காரணமாக மாதத் தவணை ஒத்திவைப்புச் சலுகையை பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட கூட்டு வட்டியை வாடிக்கையாளர் கணக்கில் வங்கிகள் திரும்ப வரவு வைக்கத் துவங்கி இருக்கின்றன. இதனால், கார் உள்ளிட்ட வாகன கடன் பெற்றவர்களுக்கு சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

கொரோனா பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன், மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு ஸ்தம்பித்தது. கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பலர் வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்த நிலையில், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டதால், அனைத்து தரப்பு மக்களும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகினர்.

இந்த நிலையில், மக்களின் பொருளாதார பிரச்னைகளை கருத்தில்கொண்டு, வங்கிகளில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதத் தவணை ஒத்தி வைப்புச் சலுகையை மத்திய அரசு அறிவித்தது. இதனை அமல்படுத்த வங்கிகளையும் கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு மாதத் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு பெறும் வசதியை வாடிக்கையாளர்கள் பெற்றனர். முதலில் மூன்று மாதங்கள் கொடுக்கப்பட்ட இந்த சலுகை, பின்னர் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

எனினும், இந்த ஆறு மாதக் காலத்தில் மாதத் தவணை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், இந்த காலத்திற்கு கூடுதல் வட்டியை செலுத்த வேண்டும் என வங்கிகள் அறிவித்தன. இதனால், வாடிக்கையாளர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தும் நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்திலும் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், மாதத் தவணை ஒத்தி வைப்பு சலுகை பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, வட்டிக்கு வட்டி போடுவதில் இருந்து விலக்கு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது.

இதையடுத்து, அண்மையில் மாதத் தவணை ஒத்திவைப்பு சலுகை பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வட்டியை திரும்ப வழங்க அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. நவம்பர் 5ந் தேதிக்குள் (இன்று) இந்த தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. ரூ.2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு மட்டும் வட்டிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்றுமுதல் மாதத் தவணை ஒத்தி வைப்புச் சலுகை பெற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வட்டியை திரும்ப அவர்களது கணக்கில் வங்கிகள் வரவு வைத்து வருகின்றன. இது பொருளாராதார நெருக்கடியால் மாதத் தவணை ஒத்தி வைப்புச் சலுகை பெற்றவர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.

கார் உள்ளிட்ட வாகனக் கடன் மட்டுமின்றி, தனிநபர் கடன், வீட்டுக் கடன், கிரெடிட் கார்டுகள் மீதான கடன்கள், கல்விக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் என 8 விதமான கடன்களை பெற்றிருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் வட்டியிலிருந்து விலக்கு பெற முடியும்.


Click it and Unblock the Notifications








