உண்மையில் இது ஒரு சகாப்தம்! இதன் முடிவை யாருமே ஏற்க மாட்டார்கள்... இன்னும் என்ன எல்லாம் காத்திருக்கோ
உலக கோடீஸ்வரர்கள் மற்றும் சொகுசு பயண விரும்புகளின் பிரியமான காராக இருக்கும் பென்ட்லீ முல்சேன் காரின் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

உலக புகழ்பெற்ற சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான பென்ட்லீ, அதன் பிரமாண்ட மற்றும் புகழ்மிக்க மாடலின் சகாப்தத்தை விரைவில் நிறைவு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக செல்வந்தர்கள் மற்றும் அதிக சொகுசான பயணத்தை விரும்புவோர்களின் மத்தியில் பென்ட்லீ நிறுவனத்தின் முல்சேன் மாடலுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு.

இந்த காரின் உற்பத்தியைதான் பென்ட்லீ நிறுவனம் விரைவில் நிறுத்த இருக்கின்றதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதனை உறுதிச் செய்யும் வகையில் பென்ட்லீ முல்சேன் கார்களை தயாரிக்கும் குழு, அதன் கடைசி மாடலுடன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கின்றன. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த கடைசி தயாரிப்பு அமெரிக்க செல்வந்தர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பென்ட்லீ நிறுவனத்தின் இந்த முல்சேன் மாடல் சொகுசு கார் பல தசாப்தங்களாக உலக சந்தையில் விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தகுந்தது.

அதாவது, குறிப்பிட்டு கூற வேண்டுமானால் பென்ட்லீ நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் விற்பனையில் புதிய சாதனைப் படைக்கும் வகையில் இதுவரை 7,300 யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விற்பனைச் செய்யப்பட்டுள்ளன.
உங்களில் பலருக்கு வெறும் 7,300 யூனிட்டுதானா? என்று கேட்கத் தோன்றலாம். 7,300 என்பது இந்த விலையுயர்ந்த காருக்கு மிகப்பெரிய இலக்காகும்.

இந்த காருக்கான பெரும்பாலான பாகங்களை பென்ட்லீ நிறுவனம் கை வினைப் பொருட்களாகவே தயாரித்து பயன்படுத்துகின்றது. தெளிவாக கூற வேண்டுமானால், காருக்கான லெதர் இருக்கைகளைக் கூட கைதேர்ந்த நபர்களின் மூலம் தைத்தே பயன்படுத்துகின்றது. இதற்காக பல திறன் கொண்ட கைதேர்ந்த வல்லுநர்கள் குழுவாக இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதன் பெரும்பாலான உபகரணங்கள் கைவினைப் பொருட்களாக தயாரிக்கப்படுவதால் ஒரு யூனிட்டை தயாரிக்க மட்டுமே பல ஆயிரம் மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
அதுமட்டுமின்றி ஒவ்வொரு உபகரணத்தையும் பார்த்து பார்த்து தரம் வாய்ந்ததாக சேர்க்கப்படுவதால் இதில் ஆடம்பரத்திற்கு குறைச்சலே இருக்காது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலயே பென்ட்லீ நிறுவனத்தின் தயாரிப்புகள் மலையளவு விலையைக் கொண்டிருக்கின்றது. உதாரணமாக, பென்ட்லீ முல்சேன் காருக்கு இந்திய மதிப்பில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, எக்ஸ்-ஷோரூம் மதிப்பு மட்டுமே. இருப்பினும், இதன் சொகுசு மற்றும் பிரீமியம் வசதிகள் தற்போது டிமாண்டை உருவாக்கி வருகின்றது.

பென்ட்லீ நிறுவனம் இந்த முல்சேன் மாடலை முதன் முதலாக 2009ம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது. ஏற்கனவே கவர்ச்சியாக இருக்கும் இந்த காரை கூடுதல் கவர்ச்சியானதாக தோற்றுவிக்க வேண்டி, இக்காரை பெப்பில் கடற்கரை ஓரத்தில் வைத்து அக்கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரம்மியமான தோற்றத்தில் மதி மயங்கிய உலக செல்வந்தர்கள் அக்காருக்கு ஏகபோகமான வரவேற்பை வழங்க ஆரம்பித்தனர்.

இதன்காரணமாகவே, 11 ஆண்டுகளையும் கடந்து முல்சேன் சொகுசு காரால் உலக சந்தையில் வெற்றி பயணம் மேற்கொள்ள முடிந்தது. இந்த அல்ட்ரா லக்சூரி காரின் ஓர் மாடலை தயாரிக்க மட்டுமே 42 மில்லியன் வெல்டுகள் தேவைப்படுகிறதாம். இதேபோன்று, பாலிஷிங் மற்றும் இன்டீரியரை சீரமைப்பது என அனைத்திற்கும் பல ஆயிரம் மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இத்தகைய சிறப்புமிக்க காரொன்று தற்போது சந்தையை விட்டு வெளியேற இருப்பது பென்ட்லீ நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுக்கு மட்டுமின்றி சில செல்வந்தர்களுக்கும் இந்த தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையல், பென்ட்லீயின் தலைவரும் தலைமை நிர்வாகியுமான அட்ரியன் ஹால்மார்க் இதுகுறித்து கூறுகையில், பென்ட்லீ நிறுவனம் முதல் 100 ஆண்டுகளில் கற்றுக் கொண்ட அனைத்து வித்தைகளின் உச்சமான மாடலே முல்சேன்தான். எனவேதான் இக்கார் பென்ட்லீ வரலாற்றில் ஓர் தனித்துவமான இடத்தைப் பிடித்திருக்கின்றது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த பத்து ஆண்டுகளில் முல்சானை உயிர்ப்பித்த நூற்றுக்கணக்கான வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கைவினைஞர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது, எங்கள் 'பியோண்ட் 100' என்ற மூலோபாயத்தின் அடிப்படையில் மற்றுமொரு ஆடம்பரமான வாகனத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம். அது, பென்ட்லீயின் ஃப்ளையிங் ஸ்பர் மாடலை ஒத்ததாக இருக்கும்" என கூறினார்.


Click it and Unblock the Notifications








