ஐரோப்பாவில் கொரோனா ருத்ரதாண்டவம்... பென்ட்லீ கார் நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில், அங்கு செயல்பட்டு வரும் முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது ஆலைகளை தற்காலிகமாக மூடி வருகின்றன. இந்த வரிசையில் பென்ட்லீ நிறுவனமும் இணைந்துள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மக்கள் கொத்து கொத்தாக பலியாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் அனைத்து கார் ஆலைகளும் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமம் தனது ஆலைகளை மூடி உள்ளதோடு, தனது கீழ் செயல்ப்டு வரும் ஆடி, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்களும் ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் தங்களது ஆலைகளை மூடி வைத்துள்ளன.

இந்த நிலையில், இங்கிலாந்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் பென்ட்லீ ஆடம்பர கார் நிறுவனமும் தனது ஆலையை ஒரு மாதம் மூடுவதாக அறிவித்துள்ளது.

இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பென்ட்லீ நிறுவனத்தின் ஆஎலையில் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் ஆண்டுக்கு 11,000 கார்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 4,500 பேர் பணிபுரிகின்றனர்.

இந்த நிலையில், மார்ச் 20 (நேற்று) முதல் வரும் ஏப்ரல் 20 வரை தனது ஆலையை மூடுவதாக பென்ட்லீ அறிவித்துள்ளது. பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த முடிவை பென்ட்லீ கார் நிறுவனம் எடுத்துள்ளது.

"கடந்த ஆண்டுதான் பென்ட்லீ நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி மேம்பட்டு இருந்தது. இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலும் சிறப்பானதாக அமைந்தது. ஆனால், கொரோனா வைரஸால் எங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று பென்ட்லீ நிறுவனத்தின் தலைவர் அட்ரியன் ஹால்மார்க் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக, மாஸ்க் மற்றும் இதர மருத்துவ சேவைக்கான கருவிகளை தயாரித்து கொடுக்கும்படி, தொழில் நிறுவனங்களை இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது. வென்டிலேட்டர் மற்றும் மாஸ்க் உள்ளிட்டவற்றை தயாரித்து கொடுப்பதற்காக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக பென்ட்லீ பரிசீலித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இரண்டாம் உலகப்போரின்போது போர் விமானங்களுக்கு தேவையான எஞ்சின்களை பென்ட்லீ தயாரித்து கொடுத்தது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications








