முற்றிலும் சூரிய மின்சக்தியில் இயங்கப்போகும் சென்னை பிஎம்டபிள்யூ கார் ஆலை
சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் மேம்பாட்டு பணிகள் நடத்து வருகின்றன. விரைவில் முழுமையான பசுமை ஆலையாகவும் மாற இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு கார் தயாரிப்பில் உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலும் டாப்-3 சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும், சென்னை அருகே ஓரகடத்தில் 7.7 ஏக்கர் பரப்பளவில் பிஎம்டபிள்யூவின் கார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த ஆலையில் கார் உற்பத்தி நடந்து வருகிறது இந்த நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனை முற்றிலும் பசுமை அம்சங்கள் நிறைந்த ஆலையாக மாற்றும் முயற்சியில் பிஎம்டபிள்யூ ஈடுபட்டுள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அதன்படி, தற்போது ஆலைக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. இந்த ஆலையில் உள்ள சூரிய ஒளி மின்சார கட்டமைப்பு மூலமாக 40 சதவீத மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இதனை 100 சதவீதமாக அதிகரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

இதன்மூலமாக, ஆலையின் மின்தேவை முழுமையாக சூரிய ஒளியிலிருந்து பெறப்படுவதால், பசுமை மின்சார ஆலை என்ற அந்தஸ்துக்கு மாறும். அதேபோன்று, புதுப்பிக்க முடியாத எரிசக்தி பயன்பாட்டை முற்றிலுமாக குறைக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. மேலும், எல்இடி விளக்குகள் மூலமாக மின்சார பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்று, நீர் பயன்பாடு மற்றும் மேலாண்மையிலும் சென்னை பிஎம்டபிள்யூ ஆலை நிர்வாகம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஆலையில் 14.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண் இரண்டு மழை நீர் சேகரிப்புக்காக குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குளங்களில் சேகரிக்கப்படும் நீர் மூலமாக கார்களுக்கான நீர் கசிவு சோதனை மற்றும் ஆலையின் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தவிரவும், நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான கட்டமைப்பும் உள்ளது. இதனால், நீர் மேலாண்மையிலும் இந்த ஆலை குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலமாக, 45 சதவீதம் அளவுக்கு நீர் தேவை குறைக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.

சென்னை பிஎம்டபிள்யூ ஆலை வளாகத்தில் இரண்டு பசுமை கட்டமைப்பு வளாகங்களும் உள்ளன. இதில், 31 வகையான 2,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. மற்றொரு தோட்டத்தையும் பிஎம்டபிள்யூ நிர்வாகம் அமைத்து வருகிறது. இதில், 4,000 உள்நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்படுகின்றன.இதனால், அடுத்த சில மாதங்களில் சென்னை பிஎம்டபிள்யூ கார் ஆலையானது சுற்றுச்சூழல் கட்டமைப்பு கொண்ட மிகச் சிறந்த ஆலை என்ற அந்தஸ்தை பெறும்.


Click it and Unblock the Notifications








