ஒரே இடத்தில் கார், பைக் விற்பனை... புதிய ஷோரூமை திறந்தது பிஎம்டபிள்யூ
தனது பைக், கார்களை ஒரே இடத்தில் விற்பனை செய்யும் வகையில் புதிய ஷோரூமை திறந்துள்ளது பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் சொகுசு கார் மற்றும் விலை உயர்ந்த பைக் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது. அதேநேரத்தில், பைக் மற்றும் கார்களை வெவ்வேறு பிரிவுகளின் கீழ் விற்பனை செய்வதுடன், தனித்தனி விற்பனை மையங்களுடன் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தனது பைக் மற்றும் சொகுசு கார்களை ஒரே ஷோரூமில் வைத்து விற்பனை செய்வதற்கான புதிய நிலையத்தை ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் அமைத்துள்ளது பிஎம்டபிள்யூ.

பிஎம்டபிள்யூ ஃபெஸிலிட்டி நெக்ஸ்ட் என்ற பெயரில் இந்த புதிய விற்பனை மையம் திறக்கப்பட்டு இருக்கிறது. ஒரே இடத்தில் பைக், கார்களை வாங்குவதற்கான வாய்ப்பை பிஎம்டபிள்யூ வாடிக்கையாளர்கள் பெற முடிவதுடன், சர்வீஸ் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் இந்த டீலர் மூலமாக பெற முடியும்.

ஓஎஸ்எல் பிரெஸ்டீஜ் பிஎம்டபிள்யூ என்ற பெயரில் இந்த புதிய ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய ஷோரூம் மூலமாக பிஎம்டபிள்யூ பைக், கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் இரண்டு விதமான தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். பிஎம்டபிள்யூ கார் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பிஎம்டபிள்யூ பைக்குகளை பார்த்து வாங்குவதற்கான உந்துதலையும், பைக் வாங்க வருவோரை கார் வாங்குவதற்கான உந்துதலையும் இது ஏற்படுத்த கூடும்.

இந்த புதிய ஷோரூம் 73,000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது. வாகனங்கள் காட்சிப்படுத்துவதற்கு மிக விசாலமான இடவசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. சர்வீஸ் மையம், பிஎம்டபிள்யூ கார், பைக்குகளை டிவி திரை மூலமாக சிறப்பம்சங்களை பார்ப்பதற்கான அறை, வாடிக்கையாளர் ஓய்வு அறை ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. கார்களை கஸ்டமைஸ் செய்து பார்ப்பதற்கான வசதியுடன் விர்ச்சுவல் திரை மற்றும் சாதனங்களும் உள்ளன.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா இடைக்கால தலைவர் அர்லின்டோ டெக்ஸிரியா குறிப்பிடுகையில்,"பிஎம்டபிள்யூ ரசிகர்கள், வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தை இந்த ஷோரூம் வழங்கும். அவர்களை அனைத்து விதத்திலும் மகிழ்ச்சிப்படுத்துவதற்கான அம்சங்கள் இந்த ஷோரூம்களில் உள்ளன," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் ஷோரூமிற்குள் அனுமதிக்கப்படுவர் என்று ஓஎஸ்எல் டீலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் புதிய அனுபவத்தை பிஎம்டபிள்யூ கார், பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்றும் ஓஎஸ்எல் பிரெஸ்டீஜ் டீலர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்ற பிஎம்டபிள்யூ கார், பைக் ஷோரூம்கள் பிற நகரங்களிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








