பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மாரடைப்பால் மரணம்
பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ந் தேதி பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ருத்ரதேஜ் சிங் பதவி ஏற்றார். மிக சவாலான இந்தியாவின் சொகுசு கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனையை உயர்த்துவம் கொள்கை ரீதியிலான பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.

இதனால், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனை நல்ல முறையில் சென்றது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், ருத்ரதேஜ் சிங் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இளம் வயதிலேயே மிக உயரிய பொறுப்பை ஏற்று திறம் பட செயல்பட்டு வந்தார்.

ஆட்டோமொபைல் துறை மற்றும் ஆட்டோமொபைல் தவிர்த்த பிற துறைகளில் பல உயர் பொறுப்புகளை வகிந்து வந்தார். மேலும், 25 ஆண்டுகளாக பல்வறு தலைமை பொறுப்புகளில் ஏற்று திறம் பட செயல்பட்டு வந்தவர்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சர்வதேச தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக யூனிலிவர் உள்ளிட்ட பல்வேறு பிரபல நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பொறுப்புகளில் பதவி வகித்து வந்த நீண்ட அனுபவம் கொண்டவர். அனைவராலும் ரூடி என்று அன்போடு அழைக்கப்பட்டார்.

டெல்லி பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை முடித்த அவர் காஸியாபாத் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் உயர் கல்வி நிறுவனத்தில் சந்தைப்படுத்துதல் மற்றும் நிதித் துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்தார்.

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனராக இருந்த தயாள் கடந்த 7ந் தேதிதான் புற்றுநோயால் மரணமடைந்தார். இந்த நிலையில், அடுத்த 15 நாட்களில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது தலைமையை இழந்து நிற்கிறது.

ருத்ரதேஜ் சிங் திடீர் மறைவு காரணமாக, பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் தடைபடாமல் இருப்பதற்காக, அந்நிறுவனத்தின் நிதித் துறை தலைவர் அர்லிண்டோ டெக்ஸிரா இடைக்கால தலைவராக பொறுப்பு வகிப்பார் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ருத்ரதேஜ் சிங் மறைவுக்கு டிரைவ்ஸ்பார்க் தளம் சார்பில் ஆழந்த இரங்கலையும், அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications








