கொரோனா தடுப்பு பணிகள்... ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்கும் பிஎம்டபிள்யூ!
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.3 கோடி மதிப்புடைய உதவிகளை வழங்க உள்ளதாக பிஎம்டபிள்யூ இந்தியா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தமிழக கொரோனா தடுப்புப் பணிகளுக்கு இந்த நிதி அதிக அளவில் பயன்படுத்தப்பட உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தடுப்பு பணிகளுக்கு அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்கவும் தொடர்ந்து கோரி வருகின்றன. இந்த சூழலில், கொரோனா தடுப்புப் பணிகளில் கார் நிறுவனங்கள் பெரிய அளவிலான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

மாருதி, மஹிந்திரா, ஃபோர்டு, ஹூண்டாய், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தேவையான நிதி மற்றும் மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும், தனது ஆலை அமைந்துள்ள புனேக்கு அருகில் கொரோனா பாதித்தவர்களுக்கான தனிமைப்படுத்தும் தற்காலிக மருத்துவமனையை அமைக்கும் பணிகளை ஏற்றது.

இந்த வரிசையில், சென்னையில் ஆலை அமைத்து சொகுசு கார்களை உற்பத்தி செய்யும் பிஎம்டபிள்யூ நிறுவனமும் இணைத்துக் கொண்டுள்ளது. அதாவது, ஆலை அமைந்துள்ள செங்கல்பட்டு மற்றும் நிறுவனத்தின் இந்திய தலைமையகம் அமைந்துள்ள குர்கான் நகரங்களில் நிவாரண மற்றும் நிதி உதவிகளை வழங்க இருக்கிறது.

இதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3 கோடி நிதியில், மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கொரோனா பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்கான தற்காலிக மருத்துவ வார்டுகள் அமைக்க வழங்கப்படும்.

அத்துடன், கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு பாதுகாப்பு உடைகளை வழங்க உள்ளது.

வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கும் ஏழை மக்களுக்கு உணவு மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் பணிகளுக்கு நிதி உதவி வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் ருத்ரதேஜ் சிங் கூறுகையில்,"கொரோனா வைரஸ் பிரச்னை பொது சுகாதாரம், வர்த்தக செயல்பாடுகள், பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சங்கடங்களை தவிர்ப்பதற்கான முயற்சியில் நாங்களும் முழு மூச்சுடன் ஒத்துழைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

மருத்துவப் பணியாளர்கள் மிகவும் அபாயகரமான சூழலில் பணிபுரிந்து வரும் இந்த சூழலில், சமூக இடைவெளியை பின்பற்றுவது மிகவும் அவசியம். இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் வரும் 3ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், ஆலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தொடர்ந்து அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்றி பணியில் ஈடுபடுள்ளனர்.

இதுதவிர்த்து, பிஎம்டபிள்யூ இந்தியா ஃபைனான்ஸ் நிறுவனம், தலைமை அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவர்கள் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மே 3ந் தேதி வரை இந்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.


Click it and Unblock the Notifications








