அதிகாரப்பூர்வ அறிவிப்பு... 2030 முதல் பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை... எங்கு தெரியுமா?
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இங்கிலாந்தில் வரும் 2030ம் ஆண்டில் இருந்து புதிய பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் வேன்களின் விற்பனை தடை செய்யப்படவுள்ளது என்பதை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி செய்துள்ளார். முதலில் வரும் 2040ம் ஆண்டில் இருந்து புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிப்பது என இங்கிலாந்து அரசு முடிவு செய்திருந்தது.

இந்த இலக்கை 2035ம் ஆண்டு என கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குறைத்தார். ஆனால் 2030ம் ஆண்டில் இருந்தே இங்கிலாந்தில் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு விடும் எனவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனவும் கடந்த ஒரு சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

அந்த தகவலை உறுதி செய்யும் வகையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனையை தடை செய்வதற்காக அதிகாரப்பூர்வமாக ஒரு தேதியை நிர்ணயித்த உலகின் முதல் பெரிய பொருளாதார நாடாக இங்கிலாந்து உருவெடுத்துள்ளது. இங்கிலாந்து பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக பிரதமர் லட்சியமாக கொண்டுள்ள 'பசுமை தொழில்துறை புரட்சி' திட்டத்தின் ஒரு பகுதியாக வழக்கமான பெட்ரோல், டீசல் இன்ஜினில் இயங்கும் கார்கள் மற்றும் வேன்களின் விற்பனைக்கு வரும் 2030ம் ஆண்டு முதல் தடை விதிப்பது என்ற முடிவு தற்போது அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் ஒரு சில ஹைப்ரிட் வாகனங்களின் விற்பனை அனுமதிக்கப்படும். புதிய பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டிற்கு நிரந்தரமாக தடை விதிப்பது என்பது இங்கிலாந்தின் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக இருக்கும். உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நகரங்களும் இதேபோன்ற கடுமையான நடவடிக்கையை எடுப்பது குறித்து தற்போது ஆலோசித்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மிக கடுமையாக மாசுபடுகிறது. இதன் காரணமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, இங்கிலாந்து பாணியில் இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பது குறித்து பல்வேறு நாடுகளும், நகரங்களும் பரிசீலனை செய்து கொண்டுள்ளன. எனவே வரும் காலங்களில் இதுபோல் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகிலேயே காற்று மாசுபாட்டால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. எனவே இந்தியாவும் பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கைளை தற்போது எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் மற்றும் சாலை வரி, பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு போன்ற சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் தற்போது வழங்கி வருகின்றன. அத்துடன் இந்தியாவில் சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications







