ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடல்... இந்தியாவில் அதலபாதாளத்திற்கு சென்ற பேருந்துகள் விற்பனை...
இந்தியாவில் பேருந்துகளின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வந்தது முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஐடி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்களும், வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் தற்போது பேருந்துகளின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் (ஏப்ரல்-செப்டம்பர்), இந்தியாவில் பேருந்துகளின் விற்பனை 90 சதவீதத்திற்கும் மேல் குறைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டின் ஏப்ரல்-செப்டம்பர் கால கட்டத்தில், 32,235 பேருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2020ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் பேருந்துகளின் விற்பனை வெறும் 2,569 யூனிட்களாக குறைந்துள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியாவில் பேருந்துகளின் விற்பனை இப்படி தடம் புரண்டு போனதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புதிய பேருந்துகளை வாங்கும் முடிவை பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் ஒத்தி வைத்திருப்பது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதுதவிர பலர் வீட்டில் இருந்தே வேலை செய்வதால், பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

அத்துடன் கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணம் செய்வதை பலர் தவிர்த்து வருகின்றனர். போதாக்குறைக்கு பல்வேறு மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்களும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. எனவே அவர்களிடம் இருந்து பேருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய ஆர்டர்கள் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3,323 பேருந்துகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு செப்டம்பர் மாதம் வெறும் 670 யூனிட்களாக குறைந்துள்ளது. உள்நாட்டில் பேருந்து விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ள நிலையில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான முயற்சிகளை பேருந்து உற்பத்தியாளர்கள் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

கொரோனா அச்சம் காரணமாக பேருந்துகளில் பயணம் செய்வதை மக்கள் தவிர்க்க தொடங்கியுள்ளதால், ஏற்கனவே பேருந்து உரிமையாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர்கள் தரப்பில் இருந்தும் புதிய பேருந்துகளுக்கான ஆர்டர்கள் வழங்கப்படுவது தடைபட்டு போயுள்ளது.

மறுபக்கம் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பலர் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விற்பனை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விற்பனையும் அதலபாதாளத்தில்தான் இருந்தது.

ஆனால் சொந்த வாகனங்களுக்கான தேவை அதிகரிப்பு மற்றும் தசரா, தீபாவளி பண்டிகை காலம் உள்ளிட்ட காரணங்களால் சமீப காலமாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆனால் பேருந்துகளின் விற்பனை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும்? என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








