டாடா கார்களை புக்கிங் செய்தால் 'ஹோம் டெலிவிரி'!
புதிய டாடா கார்களை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஹோம் டெலிவிரி வசதி கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புக்கிங் செய்வது உள்ளிட்ட இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னை காரணமாக, வீட்டிற்கே மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை டோர் டெலிவிரி செய்யும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் அரசு அனுமதியுடன் செய்யத் துவங்கி இருக்கிறது. இது மக்களுக்கும், நிறுவனங்கள் என இருதரப்புக்கும் பயன் அளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இந்த சூழலில், கார் நிறுவனங்களும், டீலர்களும் இழப்பை தவிர்க்க பல்வேறு புதிய யுக்திகளை கையில் எடுக்கத் துவங்கி இருக்கின்றன. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது.

அதாவது, டாடா காரை வாங்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்தால், வீட்டிற்கே வந்து புதிய காரை டெலிவிரி கொடுக்கும் வசதியை வழங்க இருப்பதாக டீம் பிஎச்பி தள உறுப்பினர் மூலமாக செய்தி வெளிவந்துள்ளது.

புதிய டாடா கார்களை புக்கிங் செய்வதற்காக, அந்நிறுவனத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக இணையதள பக்கம் மூலமாக இந்த வசதியை பெற முடியும்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களையும் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்ய முடியும் என்பது தெரிய வந்துள்ளது. அந்த பக்கத்திலேயே கார் குறித்த அனைத்து தகவல்களும் அடங்கிய குறிப்பேடும் கிடைக்கும்.

புதிய டாடா காரை முன்பணம் செலுத்தி ஆன்லைனில் புக்கிங் செய்தால், அருகாமையிலுள்ள டீலரிலிருந்து விற்பனை பிரதிநிதி வாட்ஸ் அப், இ மெயில் அல்லது வீடியோ அழைப்பு மூலமாக வாடிக்கையாளருடன் பேசுவார். கார்களுக்கு இருக்கும் ஆஃபர், விலை, எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் ஆலோசிக்கப்படும்.

இந்த நடைமுறை முடிந்தவுடன், காரை டீலரிடமிருந்தோ அல்லது வீட்டிலேயே டெலிவிரி பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த புதிய நடைமுறை மூலமாக புதிய டாடா கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹாரியர் ஆகிய கார்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்க முடியும். இந்த கார்களுக்கான புரோஷரும் அந்த பக்கத்திலேயே கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








