கொரோனோ கோரத்தாண்டவம்... ஐரோப்பாவில் கார் உற்பத்தியில் பெரும் பாதிப்பு!
ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கு செயல்பட்டு வரும் கார் ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிவிட்டது. குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. சில நாடுகளில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி உள்ளது.

இந்த சூழலில், பணியாளர்கள் நலன் கருதியும், அரசு அறிவுறுத்தல்களின்படி ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் பல முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்தி வைத்துள்ளன.

ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்லோவோக்கியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் தனது ஆலைகளில் உற்பத்தி பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் குழுமம் தெரிவித்துள்ளது. தனது தாயகமான ஜெர்மனியின் வோல்ஃப்ஸ்பர்க்கில் உள்ள மிகப்பெரிய கார் ஆலை உள்பட இதர நாடுகளில் செயல்பட்டு வரும் ஆலைகளிலும் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

மேலும், உதிரிபாகங்கள் சப்ளையிலும் பெரும் இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஃபியட் க்றைஸ்லர் குழுமமும் தனது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆலைகளை தற்காலிகமாக மூடியுள்ளது.

பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் செயல்பட்டு வரும் தனது கார் ஆலைகளில் இரண்டு வாரங்களுக்கு உற்பத்திப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக டொயோட்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனமும் கார் ஆலைகளை அடுத்த மாதம் 19ந் தேதி வரை மூடி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

சொகுசு கார் உற்பத்தியில் பெயர் பெற்ற ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனமும் கார் உற்பத்தியை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதனால், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவில் உள்ள கார் ஆலைகளிலும் உற்பத்திப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் முதல்கட்டமாக இரண்டு வாரங்களுக்கு உற்பத்தியை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால், ஒரு மாதம் காலம் வரை உற்பத்தியை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் கார் நிறுவனங்களில் உற்பத்திப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதால், மிகப்பெரிய பொருளாதார இழப்பை நிறுவனங்களும், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தினால் மட்டுமே பல நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பும். இதனால், பணியாளர்கள் கலக்கத்துடன் இந்த சூழ்நிலையை கடந்து வருகின்றனர். கார் தொழிற்சாலைகள் மட்டுமின்றி, பிற அனைத்து துறைகளும் கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கியுள்ளன. இது உலக அளவில் பெரும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








