கார் கண்ணாடிகளுக்கு ஐஎஸ்ஐ முத்திரை கட்டாயமாகிறது!
கார்களின் பாதுகாப்பு தரத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், அடுத்து ஒரு அதிரடி முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உற்பத்தியாகும் கார்களின் தரம் படுமோசமாக இருந்து வந்தது. இதனை கொஞ்சம் கொஞ்சமாக சர்வதேச அளவிற்கு உயர்த்தும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. கார்களில் சில அடிப்படை பாதுகாப்பு தொழில்நுட்பங்களை மத்திய அரசு கட்டாயமாக்கியது.

இதன்படி, ஏர்பேக், ஏபிஎஸ் உள்ளிட்ட பல முக்கிய பாதுகாப்பு வசதிகள் அனைத்து கார்களிலும் கட்டாயமாக்கப்பட்டது. அத்துடன், கட்டமைப்பு தரத்திலும் பல புதிய விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, கார்களின் பாதுகாப்பு தரத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சிகளையும், திட்டங்களிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி, கார்களின் பயன்படுத்தப்படும் விண்ட்ஷீல்டு எனப்படும் முன்புற, பின்புற கண்ணாடிகள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளுக்கு புதிய தர விதிமுறை கொண்டு வரப்பட உள்ளது.

அதாவது, கார்களில் பயன்படுத்தப்படும் விண்ட்ஷீல்டு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் ஐஎஸ்ஐ தர முத்திரை இருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்மூலமாக, தரம் குறைந்த அல்லது போலி உதிரிபாகங்களை ஒழிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த புதிய விதிமுறை அமலுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் அல்லது அசெம்பிள் செய்யப்படும் கார்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.

இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விற்பனைக்கு பிந்தைய சேவை சந்தையில், போலி உதிரிபாகங்களை ஒழிப்பதற்கும் இந்த புதிய விதிமுறை பெரிதும் பயன்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








