ஏற்கனவே இருக்கற பிரச்னைல புதுசா ஒன்னு... என்னடா இது குஜராத்துக்கு வந்த சோதனை... என்னனு தெரியுமா?
குஜராத் மாநிலத்தில் கார், டூவீலர்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறையில் மந்தநிலை நிலவி வருகிறது. கடந்த ஆண்டு மத்தியில், ஆட்டோமொபைல் துறை மந்தநிலைதான் முக்கிய பேசு பொருளாக இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை சமயத்தில், வாகனங்களின் விற்பனை ஓரளவிற்கு அதிகரித்ததால், இந்த பிரச்னை கவனம் இழந்தது.

எனினும் ஆட்டோமொபைல் துறை இன்னும் சரிவில் இருந்து மீளவில்லை. இதை நிரூபிக்கும் விதமாக தற்போது சில புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. நவராத்திரி-தீபாவளி பண்டிகை காலத்திற்கு பிறகு குஜராத் மாநிலத்தில் வாகனங்களின் விற்பனை 'டல்' அடிக்கிறது. இதன்படி கடந்த பிப்ரவரி மாதமும் அங்கு கார் மற்றும் டூவீலர்களின் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக நான்காவது மாதமாக குஜராத் மாநிலத்தில் வாகனங்களின் விற்பனை சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார மந்தநிலை, பிஎஸ்-6 வாகனங்கள் இன்னும் முழுமையாக விற்பனைக்கு வராதது மற்றும் கொரோனா வைரஸ் ஆகியவைதான் இந்த சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23,317 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 20,413 கார்கள் மட்டுமே அங்கு விற்பனையாகியுள்ளன. இது 12.4 சதவீத வீழ்ச்சியாகும். ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ( Federation of Automobile Dealers' Association - FADA) வெளியிட்டுள்ள டேட்டாவின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வாகன டீலர்ஷிப் ஒன்றின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஏற்கனவே பொருளாதார மந்தநிலை பிரச்னை இருந்து வருகிறது. இதனுடன் தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையும் சேர்ந்து கொண்டுள்ளது. வாகனங்களின் பிஎஸ்-4 வேரியண்ட்களுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்-6 வேரியண்ட்களின் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

அத்துடன் அனைத்து மாடல்களுக்கும், அனைத்து நிறுவனங்களாலும், இன்னும் பிஎஸ்-6 வேரியண்ட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. இதுவும் ஒரு பிரச்னையாக உள்ளது. இவை அனைத்தும் சேர்ந்து வாகனங்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன'' என்றார். கார்களின் விற்பனையை போல் குஜராத் மாநிலத்தில் இரு சக்கர வாகனங்களின் விற்பனையும் சரிவடைந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 78,711 இரு சக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 84,300 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 6.6 சதவீத வீழ்ச்சியாகும். இங்கே மற்றொரு விஷயத்தையும் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.

இந்தியா முழுவதும் பார்த்தால், கார்களின் விற்பனை 1.1 சதவீதம் என்கிற அளவிற்கு மட்டுமே சரிந்துள்ளது. ஆனால் குஜராத் மாநிலத்தில் அதை விட அதிகமாக 12.4 சதவீதம் என்கிற அளவிற்கு கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இதுகுறித்து ஆட்டோமொபைல் துறையை சேர்ந்தவர்கள் கூறுகையில், ''புதிய வாகனங்கள் தேவைப்படுபவர்கள் மட்டுமே அவற்றில் முதலீடு செய்கின்றனர்.

அதே சமயம் இன்னும் சில வாடிக்கையாளர்கள், பிஎஸ்-4 மாடல்களுக்கு கடைசி நேரத்தில் ஏராளமான தள்ளுபடிகள் கிடைக்கும் என எதிர்பார்த்து வாகனங்கள் வாங்குவதை ஒத்தி வைத்துள்ளனர். எனவே விற்பனை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம்'' என்றார். இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

இதனால் பிஎஸ்-4 ஸ்டாக்குகளை க்ளியர் செய்வதற்காக மார்ச் மாத கடைசியில் கவர்ச்சிகரமான சலுகைகளை டீலர்ஷிப்களில் அள்ளி வீசுவார்கள் என்பது வாடிக்கையாளர்களின் எண்ணமாக உள்ளது. எனவேதான் புதிய கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களை வாங்கும் முடிவை ஒரு சிலர் தள்ளி போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








