கார் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்தலாம்... ஆனால்..! ஆனா என்னங்க? இதுக்கு ஒரு கன்டிஷன் இருக்கு பாஸ்!
வாகனம் இயக்கும்போது செல்போனை பயன்படுத்த விதிக்கப்பட்டிருக்கும் தடைடைய மத்திய அரசு நீக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே கைப்பேசியை பயன்படுத்த வேண்டும் என அது கூறியிருக்கின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனத்தை இயக்கும் போது செல்போனில் பேசுவது அல்லது அதைப் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். இதற்காக வாகன ஓட்டிகள் பலர் கடந்த காலங்களில் அதிகபட்ச அபராதங்களைச் செலுத்தியிருக்கின்றனர்.

இந்த தடைக்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம், இது ஓட்டுநரை திசை திருப்பி, விபத்து உருவாக வழிவகுக்கும் என்பது மட்டுமே ஆகும். ஆகையால், நாட்டில் அரங்கேறும் விபத்துகளுக்கு இதுவும் ஓர் காரணம் என்பதால் மோட்டார்சைக்கிள், கார் என எந்த வாகனத்தில் பயணிக்கும்போதும் ஓட்டுநர்கள் செல்போனைப் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விதியில்தான் தற்போது மத்திய அரசு புதிய மாற்றத்தை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, "குறிப்பிட்ட இரு காரணங்களுக்காக மட்டும் வாகன ஓட்டிகள் செல்போனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என கூறப்பட்டுள்ளது.

இதற்கான மாற்றத்தையே மோட்டார் வாகன சட்டம் 1989ல் மத்திய அமைச்சகம் செய்திருக்கின்றது. இந்த புதிய மாற்றத்தின்படி, ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றிற்காக மட்டுமே செல்போனை வாகன ஓட்டிகள் பன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முந்தைய காலத்தில் புதிய பாதையைத் தேடி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களிடமே வழி கேட்டு சென்றுக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது ஆட்டோ ஓட்டுநர்களே கூகுள் மேப்பின் உதவியுடன்தான் சவாரியே செல்கின்றனர். இந்த முக்கிய பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே வாகன ஓட்டி செல்போன் பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

அதேசமயம், செல்போனை பயன்படுத்துவதால் பிறருக்கு தீங்கு ஏற்படாத வண்ணம் இருக்க வேண்டும். குறிப்பாக, சக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு எந்த இடையூறுகளையும் வாகன ஓட்டி செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், செல்போன் பயன்படுத்தியவாறு செல்லும்போது போலீஸாரிடம் சிக்கினால், உரிய ஆவணங்களை அவர்களிடத்தில் காண்பிக்க வேண்டும். வாகன சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மேற்கூறிய காரணம் உங்களுக்கு இருப்பின், தாராளமாக வாகன ஓட்டிக் கொண்டு செல்போனைப் பயன்படுத்தலாம்.

இதுதவிர வேறு எதற்காகவும் செல்போனைப் பயன்படுத்தி, அப்போது போலீஸாரிடம் சிக்கினால் நிச்சயம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக, உச்சபட்ச அபராதத்திற்கு ஆளாகலாம். இதற்கு கடந்த கால சம்பவங்களே உதாரணம்.

மது போதையால் ஏற்படும் விபத்துகளைப் போலவே செல்போனால் அரங்கேறிய விபத்துகளும் ஏராளம். எனவேதான், இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து விலக்களிக்கும் விதமாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் புதிய மாற்றங்களைச் செய்திருக்கின்றது.

மேற்கூறிய மாற்றம் கார் ஓட்டுநர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, வருகின்ற 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆர்சி புத்தம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கட்டாயம் ஒரிஜினல் ஆவணங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற விதி மாற்றப்பட்டு டிஜிட்டல் வழியில் ஆவணங்கள் வைத்திருப்பது ஊக்குவிக்கப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








