கார் விலையை கணிசமாக உயர்த்தும் நிறுவனங்கள்... புத்தாண்டில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சுமை!
கொரோனா பிடியில் இருந்து மீள்வதற்காக கார் நிறுவனங்கள் கொடுத்து வந்த சிறப்பு சேமிப்புச் சலுகைகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நாளை முதல் கூடுதல் சுமை ஏற்பட உள்ளது. ஆம், பெரும்பாலான முன்னணி நிறுவனங்கள் கார் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

கொரோனா பிரச்னையால் நடப்பு ஆண்டில் கார் நிறுவனங்கள் பெரிய இழப்புகளை சந்தித்தன. இருப்பினும், கொரோனாவிலிருந்து தப்புவதற்காக சொந்த வாகனங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதால், தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக, பண்டிகை காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கார் நிறுவனங்கள் பதிவு செய்தன.

மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு சிறப்பு சேமிப்புச் சலுகைகள், தள்ளுபடிகள், கடன் திட்டங்களை போட்டி போட்டு அறிவித்தன. இடைப்பட்ட காலத்தில் கார் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது கார் விற்பனை சூடுபிடித்துள்ளதால், விலை உயர்வை பெரும்பாலான கார் நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.

மாருதி, ஹூண்டாய், கியா உள்ளிட்ட சாதாரண ரக கார்கள் முதல் பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் வரை நாளை முதல் (ஜனவரி 1) முதல் உயர்த்துவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டன. ஒவ்வொரு நிறுவனமும் விலை உயர்வு குறித்து வெளியிட்டுள்ளத் தகவல்களை தனித்தனியாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாருதி சுஸுகி
மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் விலை நாளை முதல் உயர்த்தப்பட உள்ளது. ஆனால், எவ்வளவு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது என்பது குறித்து மாருதி தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், வழக்கம்போல் 3 சதவீதத்தை ஒட்டி விலை உயர்வு இருக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், அனைத்து கார் மாடல்களின் விலையையும் உயர்த்த இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ்
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் கார்களின் விலை புத்தாண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது. மாருதி போன்ற, ஹூண்டாய் கார் நிறுவனமும் எவ்வளவு சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஜனவரி முதல் வாரத்தில் டீலர்களில் இந்த விலை உயர்வு விபரம் குறித்த தகவலை தெரிந்து கொள்ள முடியம்.

ஹூண்டாய் மோட்டார்ஸ்
ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் கார்களின் விலை புத்தாண்டு முதல் உயர்த்தப்பட உள்ளது. மாருதி போன்ற, ஹூண்டாய் கார் நிறுவனமும் எவ்வளவு சதவீதம் விலை உயர்த்தப்படும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை. ஜனவரி முதல் வாரத்தில் டீலர்களில் இந்த விலை உயர்வு விபரம் குறித்த தகவலை தெரிந்து கொள்ள முடியம்.

கியா மோட்டார்ஸ்
கியா கார்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளது. இதுகுறித்து கியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், டீலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜனவரியில் இருந்து விலை கணிசமாக உயர்த்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சொனெட், செல்டோஸ் கனவில் மிதந்து கொண்டிருப்பவர்களுக்கு இது சற்று ஏமாற்றம் அளிக்கும் செய்தியாக இருக்கும்.

மஹிந்திரா
மஹிந்திரா எஸ்யூவி வகை கார்களின் விலையும் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளது. அனைத்து வகை பயணிகள் வாகனங்களுக்கும் விலை உயர்த்தப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது. கார் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதையடுத்து, விலை உயர்வு செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.

எம்ஜி மோட்டார்
எம்ஜி மோட்டார் நிறுவனமும் கார்களின் விலையை நாளை முதல் உயர்த்த இருக்கிறது. அதிகபட்சமாக 3 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. அறிமுகச் சலுகை விலை காலம் முடிவடைந்ததால், கடந்த மாதம் க்ளோஸ்ட்டர் எஸ்யூவி விலையை எம்ஜி மோட்டார் உயர்த்தியது நினைவிருக்கலாம்.
இதனிடையே, வரும் ஜனவரியில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹோண்டா
ஹோண்டா கார்களின் விலை ஜனவரி 1 முதல் உயர்த்தப்பட உள்ளது. அனைத்து மாடல்களின் விலையை உயர்த்துவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. ஹோண்டா ஜாஸ், சிட்டி, டபிள்யூஆர்வி மற்றும் அமேஸ் கார்களின் விலை நாளை முதல் அதிகரிக்கப்படுகிறது.

ரெனோ
ரெனோ கார்களின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது. ரெனோ கார்களின் விலை ரூ.28,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. க்விட், ட்ரைபர் உள்ளிட்ட முன்னணி கார்களின் விலை நாளை முதல் உயர்த்தப்பட உள்ளது.

இதர நிறுவனங்கள்
ஃபோர்டு, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, நிஸான், டட்சன், பிஎம்டபிள்யூ என அனைத்து பிரபல நிறுவனங்களும் நாளை முதல் கார் விலை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் புத்தாண்டு முதல் கூடுதல் சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications








