எலெக்ட்ரிக் கார் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு ஓர் சூப்பர் நியூஸ்
மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்திற்கு மத்திய அரசு கால நீட்டிப்பு வழங்கி உள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பெருநகரங்களில் பெரிய அளவில் காசு மாசுபாடு ஏற்பட்டு வருகிறது. இதனால், மக்களின் உடல்நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீங்கு ஏற்பட்டு வருகிறது. வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையை தவிர்ப்பதற்கு தீர்வு காணும் வகையில் மின்சார வாகனத் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

மின்சார வாகனங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில், அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தை சிறப்பு நிதி ஒதுக்கீடு மூலமாக மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஃபேம் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த திட்டம் முதல் கட்டம் முடிவடைந்து இரண்டாம் கட்டமாக செயல்பாட்டில் உள்ளது. தற்போது ஃபேம்-2 திட்டம் காலாவதியாக உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

வரும் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை இந்த திட்டத்தின் கீழ் விதிகளின்படி, தகுதியுடைய இருசக்கர, மூன்றுசக்கர, நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு மானியம் பெற முடியும். அதேநேரத்தில், பஸ் உள்ளிட்ட கனரக மின்சார வாகனங்களுக்கு மானியம் குறித்த விளக்கம் இல்லை.

கனரக மின்சார வாகனங்களை வாங்குவோர் இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெறுவது கேள்விக்குறியாகி இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஃபேம்-2 திட்டத்திற்கு ரூ.10,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த திட்டத்தின் கீழ் 10 லட்சம் இருசக்கர மின்சார வாகனங்களையும், 5 லட்சம் மூன்று சக்கர மின்சார வாகனங்களையும், 55,000 கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களையும், 7,000 எலெக்ட்ரிக் பஸ்களையும் விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஃபேம்- 2 திட்டத்தின் கீழ் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மின்சார வாகனங்களுக்கே மானியம் பெற அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ரேஞ்ச் மற்றும் திறன் அடிப்படையிலும் இந்த மானியத் திட்டத்தில் பல விதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








