வாகன இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கான காப்பீட்டு புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதுடன், மக்களும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். இதனால், இயல்பு நிலை அடியோடு பாதித்துள்ளது.

இந்தநிலையில், வங்கிக் கடன் மாதத் தவணை, மோட்டார் வாகனங்களுக்கான தகுதிச் சான்று காலக்கெடு மற்றும் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டன.

இந்த வகையில், தற்போது மோட்டார் வாகனங்களுக்கான காப்பீடு புதுப்பிப்பதற்கான காலக்கெடுவும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, ஊரடங்கு உத்தரவை மனதில் வைத்து இந்த காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

கடந்த மாதம் 25ந் தேதி முதல் வரும் ஏப்ரல் 14ந் தேதி வரை மோட்டார் வாகனங்களுக்கான காப்பீட்டை புதுப்பிப்பதற்கு வரும் 21ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தற்போது வாகனங்களுக்கான இன்ஸ்யூரன்ஸ் புதுப்பிக்கும் பணிகளை ஆன்லைனிலையே வழங்குவதற்கான முயற்சிகளில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இந்த கால நீட்டிப்பு நிச்சயம் பலன் உள்ளதாக அமையும். இன்ஸ்யூரன்ஸ் நிறுவன அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், வாகன உரிமையாளர்கள் இந்த காலக்கெடுவை பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக உள்ளது.

மேலும், இந்த சமயத்தில் ஏற்படும் விபத்து உள்ளிட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பாகவும் இது அமையும். இந்த கால அவகாசம் கனரக வாகனங்கள் மற்றும் நேரடியாக பணம் செலுத்தி காப்பீட்டை புதுப்பிப்போருக்கு இது நல்ல செய்தியாக உள்ளது.

மோட்டார் வாகன காப்பீட்டில் எந்த பிரச்னையும் இல்லாமல் வரும் 21க்குள் அல்லது அதற்கு முன்னதாகவே புதுப்பித்துக் கொள்ள அவகாசம் வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








