இன்று முதல் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்ய தடை: மத்திய அரசு உத்தரவு
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதி இன்று அமலுக்கு வந்ததையடுத்து, இனி பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு தர விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யவும், பதிவு செய்வதற்குமான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சார்பில் அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிக்கை ஒன்று நேற்று அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ஏப்ரல் 1, 2020 (இன்று) முதல் நாடு முழுவதும் பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்யக்கூடாது என்று மாநில மற்றும் யூனியர் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பிஎஸ்6 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் மட்டுமே அனுமதிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையால் 21 நாள் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் அனைத்து வாகன ஷோரூம்களும் மூடப்பட்டுள்ளன. இதனால், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்க முடியாத நிலையில் பல டீலர்கள் இருக்கின்றனர். பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட்ட பல லட்சம் இருசக்கர வாகனங்களும், ஆயிரக்கணக்கான கார்களும் இருப்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் பிரச்னையால் ஊரடங்கு அமலில் உள்ளதை காரணம் காட்டி, பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை நீடிக்க வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே போதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியது. மேலும், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிலைமை கருதி, இருப்பில் உள்ள 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை மட்டும் வரும் ஏப்ரல் 15 முதல் அடுத்த 10 நாட்களுக்குள் விற்பனை செய்யவும், பதிவு செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நகலும் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் பிஎஸ்4 வாகனங்கள் வரும் ஏப்ரல் 15 முதல் 10 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்திய பகுதிகளில் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்ப்டடுள்ளது.

இந்தநிலையில், இருப்பில் தேங்கியுள்ள லட்சக்கணக்கான பிஎஸ்4 வாகனங்களை வாகன உற்பத்தி நிறுவனங்களிடமே திரும்ப ஒப்படைப்பது குறித்து வாகன டீலர் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தி வருகிறது.

இதனிடையே, நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் தனது டீலர்களிடம் பிஎஸ்4 வாகனங்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. தேங்கிய பிஎஸ்4 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications








