சாலை விபத்து உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்போம்: நிதின் கட்காரி சூளுரை
வரும் மார்ச் மாதத்திற்குள் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 25 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி இருக்கிறார்.

உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக அளவில் 199 நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது.

நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் நடக்கின்றன. இதன்மூலமாக, 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சாலை விபத்துக்களை குறைப்பதற்கான முயற்சிகளுக்கு போதிய பலன் இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் நம் நாட்டில் சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையானது 25 சதவீதம் அளவு குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று நெடுஞ்சாலைகளில் மனித மற்றும் விலங்குகள் உயிரிழப்புகளை தடுப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சார திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலமாக துவங்கி வைத்து பேசினார். அப்போது, அவர் கூறுகையில், கடந்த ஆண்டுகளாகவே சாலை விபத்துக்களையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பது சவாலானதாகவே இருந்து வருகிறது.

எனினும், நாடுமுழுவதும் விபத்து அதிகம் நடக்கும் அல்லது அதிக ஆபத்து உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் பாதுகாப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கு விழிப்புணர்வு பிரச்சாங்களும் தேவைப்படுகின்றன.

நம் நாட்டில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துக்களும், 1.50 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த எண்ணிக்கையை வரும் மார்ச் 31க்குள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பதற்கு உறுதிபூண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் விபத்து அபாயம் உள்ள 5,000 இடங்களிலும் அதிக முன்னுரிமை அடிப்படையில், அந்த இடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குறுகிய காலம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் அந்த இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடமுறைகளும் ஆராயப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








