இது பார்க்கிங் ஏரியா இல்லை! அனைத்தும் திருடப்பட்ட கார்கள்! இருவரின் கைவரிசையால் மிரண்டுபோன காவல்துறை
இரு திருடர்கள் இணைந்து விலையுயர்ந்த எஸ்யூவி கார்களை மட்டுமே தேடிபிடித்து திருடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் பார்ப்பதற்கு பார்க்கிங் ஏரியாவைப் போன்று காட்சியளிக்கலாம். பார்க்கிங் செய்யப்படும் பகுதிகளில் மட்டுமே இதுபோன்று பத்துக்கும் மேற்பட்ட கார்களை நம்மால் காண முடியும். ஆனால், அது பார்க்கிங் பகுதி அல்ல. புகைப்படத்தில் காணப்படும் அனைத்து கார்களும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்டவை ஆகும்.

இந்த தகவல் நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஆம், சண்டிகர் மாநிலத்தைச் சேர்ந்த இரு நபர்கள் மட்டுமே இணைந்து 18க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்களை திருடி வந்துள்ளனர். இதனைதான் தற்போது சண்டிகர் மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என கூறப்படுகின்றது.

சண்டிகரில் அரங்கேறிய இந்த சம்பவம் அம்மாநில வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக் காலங்களாக வாகனங்கள் திருட்டு சார்ந்து வெளியாகும் ஒரு சில தகவல்கள் நம்மை ஆச்சரியத்திலும், பிரம்மிப்பிலும் மூழ்க வைக்கின்ற வகையில் இருக்கின்றன. அம்மாதிரியான ஓர் சம்பவமாகதான் சண்டிகர் மாநிலத்தில் அரங்கேறிய இந்த கார் திருட்டு சம்பவம் இருக்கின்றது.

இரண்டே நபர்கள் குறிப்பாக எஸ்யூவி கார்களை மட்டும் தேடிப்பிடித்து திருடியிருப்பது போலீஸாரையே மிரள வைத்துள்ளது.
அதில், டொயோட்டா பார்ச்சூனர் கார்களே அதிகளவில் இருக்கின்றன. அதாவது 8 யூனிட்டுகள் வரை டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி கார்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அவற்றுடன், மூன்று டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா எம்பிவி, ஐந்து ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் இரு மாருதி சுசுகி விட்டார ப்ரெஸ்ஸா ஆகிய கார்களையும் கொள்ளையர்களிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இத்துடன், நாட்டின் வேறேதேனும் பகுதியில் திருடப்பட்ட கார்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட வாகன தணிக்கையின் மூலமே முதலில் ரமேஷ் என்பவர் பிடிபட்டுள்ளார். 39 வயதான இவர் திருடப்பட்ட ஹூண்டாய் க்ரெட்டா காரில் வலம் வந்துக் கொண்டிருந்தபோது பிடிபட்டுள்ளார்.
அவர் பயன்படுத்திய காரானது போலியான செஸிஸ் எண் மற்றும் எஞ்ஜின் எண்களைக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்தே, அவரிடம் தீவிர விசாரணைப் போலீஸார் மேற்கொண்டனர்.

இதன்மூலமாகவே, ரமேஷ் மற்றும் அமித் குமார் என்னும் மற்றொருவரும் இணைந்து எஸ்யூவி கார்களை திருடி வந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தின், மீரட் பகுதியில் இருக்கும் கார் திருடர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஒரு சில கார்கள் வேறு திருடர்களில் இருந்து வாங்கப்பட்டவை என தெரிகின்றது.

இவ்வாறு, திருடப்பட்ட மற்றும் திருடர்களிடத்தில் இருந்து வாங்கப்பட்ட கார்களை சற்று கூடுதல் விலையில் செகண்ட் ஹேண்ட் சந்தையில் இவர்கள் விற்று வந்துள்ளனர். குறிப்பாக, கார்களின் சேஸிஸ் நம்பர் மற்றும் எஞ்ஜின் எண்ணை டூப்ளிகேட் செய்து அந்த கார்களுக்கு பதிவு செய்யும் முயற்சிகளையும் அவர்கள் செய்துள்ளனர். இதில், இவ்விருவரும் நல்ல வருமானத்தை ஈட்டி வந்ததாகப் போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வருகின்றது. திருடர்கள் வாகனம் மற்றும் சேஸிஸ் எண்களை மாற்றுவதனால் அதனை கண்டறிவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்படுகின்றது. எனவேதான், அவர்கள் சிக்க நீண்ட காலமாகின்றது. அந்தவகையில், நீண்ட நாட்களாக சிக்காமல் போலீஸாரின் கண்களில் மண்ணை தூவி வந்த பிரபல கார் கொள்ளையர்கள்தான் தற்போது சிக்கியிருக்கின்றனர்.

இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களால் வாகன உரிமையாளர்கள் பதற்றத்தில் உறைந்திருக்கின்றனர். இந்த அச்சத்தில் இருந்து விடுபடுவதற்கான பல வழிகள இந்திய சந்தையில் இருக்கின்றன. அதாவது, குறிப்பிட்ட தொழில்நுட்பங்கள் வாகன திருட்டை தவிர்க்க உதவுகின்றன. அது, திருட்டை மட்டுமில்லாமல் வாகனங்களை தொடுவதற்குக் கூட அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அம்மாதிரியான தொழில்நுட்பம்தான் ஜிபிஎஸ் மற்றும் நேவிகேஷன் கருவிகள் ஆகும். இவை, வாகனம் எங்கு இருக்கிறது என்பதை மட்டுமில்லாமல் எந்த சாலையில் சென்றுக் கொண்டிருக்கின்றது என்பதைக் கூட கணப்பொழுதில் காண்பித்துவிடும். எனவே, வாகனம் திருடப்பட்டாலும் கூட அதனைக் கண்டறிவது மிகவும் சுலபம்.
இதுமட்டுமின்றி, வாகனத்தின் இயக்கத்தைக்கூட முடக்குகின்ற அளவிற்கு தொழில்நுட்பங்கள் தற்போது சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
அவை ரூ. 10 ஆயிரம் தொடங்கி 25 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றன.

இந்த சாதனம் ஒவ்வொரு முறையும், அதாவது கார் இயங்க ஆரம்பத்த உடனே செல்போனில் குறிப்பிட்ட மென் பொருள் வாயிலாக தகவலை பரிமாற தொடங்கிவிடும். இது திருடர்களை சிக்க வைப்பதற்கு ஏதுவாக இருக்கும். இத்துடன், அவர்களை காரிலேயே வைத்து லாக் செய்யவும் அந்த தொழில்நுட்பம் பயன்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








