கொரோனா எஃபெக்ட்... இந்திய பிரவேசத்தை ஒத்திப் போட்ட சீன கார் நிறுவனம்!
கொரோனா பிரச்னையால், இந்திய பிரவேதச்சை ஒத்திப் போட்டுள்ளது சீன கார் நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

சீனாவை சேர்ந்த கார் நிறுவனங்கள் இந்தியாவில் அடுத்தடுத்து களமிறங்கி வருகின்றன. எம்ஜி பிராண்டு மூலமாக குறிப்பிடத்தக்க வர்த்தகத்தை சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் பெற்றுவிட்டது. அதேபோன்று, கிரேட்வால் மோட்டார் நிறுவனமும் இந்தியாவில் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது.

அந்த வகையில், சீனாவை சேர்ந்த சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமும் இந்தியாவில் களமிறங்கும் திட்டத்தை தள்ளிப்போட்டுள்ளது. குறைந்தது ஓர் ஆண்டு காலம் இந்திய பிரவேசத்தை ஒத்தி போடுவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் ஆட்டோ தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் ரூ.4,000 கோடியை முதலீடு செய்வதற்கு சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. குஜராத் அல்லது ஆந்திராவில் ஆலை அமைப்பதற்கு முடிவு செய்திருந்தது. முதல் கார் மாடலை வரும் 2022ம் ஆண்டு அறிமுகம் செய்யவும் முடிவு செய்து வைத்திருந்தது.

மெர்சிடிஸ் பென்ஸ், நிஸான் கார் நிறுவனங்களின் டீலர்களை நடத்தி வரும் லேண்ட்மார்க் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் கார் வர்த்தகப் பணிகளை செய்வதற்கும் ஒப்பந்தம் செய்திருந்தது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது.

தற்போது கொரோனாவால் உலக அளவில் கார் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது. அத்துடன், ஏற்கனவே செய்த முதலீடுகளுக்கான வருவாய் மிக மோசமான நிலையில் இருக்கிறது. இதனால், தற்போது இந்தியாவில் களமிறங்குவது உசிதமாக இருக்காது என்று அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது.

அடுத்த ஆண்டு பிற்பாதியில் இந்தியாவில் களமிறங்குவதற்கான திட்டத்தை சங்கன் வைத்திருப்பதாக தெரிகிறது. அப்போது உள்ள சூழலை பொறுத்து முடிவு எடுக்கப்படும். முதல் மாடலாக சிஎஸ்75 எஸ்யூவியையும் இந்தியாவி்ல கொண்டு வருவதற்கான திட்டத்துடன் காய் நகர்த்தி வருகிறது.

சங்கன் சிஎஸ்75 எஸ்யூவியானது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த முதல் மாடலுடன் இந்திய சந்தையில் மிக வலுவான இடத்தை பிடித்துவிட முடியும் என்று அந்நிறுவனம் கருதுகிறது.


Click it and Unblock the Notifications








