இந்தியாவில் 2 எஸ்யூவி மாடல்களை களமிறக்க சங்கன் நிறுவனம் திட்டம்
சீனாவை சேர்ந்த சங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம் இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த செயிக் குழுமம் எம்ஜி மோட்டார்ஸ் பிராண்டுடன் இந்தியாவில் சிறப்பான வர்த்தகத்தை பிடித்துள்ளது. அடுத்து கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனமும் இந்தியாவில் வர இருப்பதை உறுதி செய்துள்ளது. இதைத்தொடர்ந்து, சீனாவை சேர்ந்த மிகவும் பழமையான வாகனத் தயாரிப்பு நிறுவனமான சங்கன் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனமும் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.

சீனாவின் சான்கிங் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சங்கன் நிறுவனம் வாகனத் தயாரிப்பில் 158 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. ஃபோர்டு, மஸ்தா, பீஜோ மற்றும் சுஸுகி கார்களை உற்பத்தி செய்து தரும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவிலும் கால் பதிப்பதற்கான முயற்சிகளில் சங்கன் ஆட்டோமொபைல்ஸ் ஈடுபட்டுள்ளது. எஸ்யூவி மாடல்கள் மூலமே இந்தியர்களை கவர்ந்து இழுக்க முடியும் என்று முடிவு செய்துள்ளது.

இதன்படி, முதல் மாடலாக இந்தியாவில் தனது சிஎஸ்75 ப்ளஸ் எஸ்யூவியை சங்கன் நிறுவனம் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புத்தம் புதிய எஸ்யூவி மாடலானது எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு மிக நேரடி போட்டியாக இருக்கும்.

சங்கன் சிஎஸ்75 ப்ளஸ் எஸ்யூவியானது 4,670 மிமீ, 4,690 மிமீ மற்றும் 4,700 மிமீ நீளம் கொண்டதாகவும், 1,700 மிமீ, 1,710 மிமீ மற்றும் 1,865 மிமீ அகலமும் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த எஸ்யூவி 2,710 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

சீனாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சங்கன் சிஎஸ்75 ப்ளஸ் எஸ்யூவியில் 1.5 லிட்டர் புளூவேல் பெட்ரோல் எஞ்சின், 2.0 லிட்டர் புளூவேல் பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

இதில், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎஸ் பவரையும், 265 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றஉம் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

இதன் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 232 பிஎஸ் பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்த புதிய எஸ்யூவியை 2022ம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு சங்கன் ஆட்டோமொபைல்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார் ஆலையை கையகப்படுத்தி பணிகளை விரைவாக செய்யவும் திட்டமிட்டுள்ளது.

டெல்லியில் தலைமையிடத்தை நிறுவுவதற்கான முயற்சியிலும் சங்கன் ஆட்டோமொபைல் ஈடுபடுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே கார்களை அசெம்பிள் செய்து விற்பனை செய்வதற்கான திட்டத்துடன் காய்களை நகர்த்தி வருகிறது. தனது சிஎஸ்35 எஸ்யூவியையும் இந்தியாவில் கொண்டு வரும் திட்டமும் அந்நிறுவனத்திடம் உள்ளது.


Click it and Unblock the Notifications








