மோசமான நிலையில் மதுரவாயல்- வாலாஜா நெடுஞ்சாலை... 50% மட்டுமே சுங்க கட்டணம் வசூலிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை - வாலாஜா இடையிலான நெடுஞ்சாலையில் 50 சதவீதம் மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையிலிருந்து பெங்களூர் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்து வருகிறது. பல இடங்களில் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால், அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

பல முக்கிய தொழிற்சாலைகள் மற்றும் போக்குவரத்து நிறைந்துள்ள இந்த சாலை முறையாக பராமரிக்கப்படவில்லை என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து புகார் அளித்தும், இதுதொடர்பான எந்த நடவடிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழையால் இந்த சாலை மேலும் மோசமான நிலைக்கு மாறி இருக்கிறது. இதுதொடர்பான புகார்களையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் மதுரவாயல்- வாலாஜா வரையிலான சாலை முறையான பராமரிப்பில் இல்லாதது குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

மேலும், இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது மதுரவாயல்- வாலாஜா சாலையின் அவல நிலை குறித்த புகைப்பட ஆதாரங்கள் நீதிபதிகள் முன்பு சமர்ப்பிக்கப்பட்டது.

பல இடங்களில் விளக்குகள் எரியாத நிலை மற்றும் சாலைக்கு நடுவே செடி வளர்க்காதது உள்ளிட்ட குறைகளை நீதிபதிகளிடம் சுட்டிக் காட்டப்பட்டடது. தேசிய நெடுஞ்சாலையின் இந்த நிலையை பார்த்து நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

ஏன் சாலை பராமரிக்கப்படவில்லை என்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அடுத்த 10 நாட்களில் மதுரவாயல் - வாலாஜா சாலை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உறுதி தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மதுரவாயல் - வாலாஜா இடையிலான இரண்டு சுங்கச் சாவடிகளில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.

சென்னை - பெங்களூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலை தங்க நாற்கரத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நான்கு முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட இந்த தேசிய நெடுஞ்சாலை இந்தியாவின் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








