இந்தியாவில் முதல் கார் மாடல் அறிமுகம்... முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிஎஸ்ஏ குழுமம்!
இந்தியாவில் முதல் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவது குறித்த முக்கிய அறிவிப்பை பிஎஸ்ஏ குழுமம் வெளியிட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ குழுமம் தனது சிட்ரோன் கார் பிராண்டுடன் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்தது. சிகே பிர்லா குழுமத்துடன் இந்திய வர்த்தகத்தை நிலைநாட்ட முடிவு செய்தது. கடந்த ஆண்டு சிட்ரோன் பிராண்டில் வர இருக்கும் முதல் மாடலாக சி5 ஏர்க்ராஸ் என்ற எஸ்யூவியையும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின் மூலமாக இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

இந்த எஸ்யூவி வடிவமைப்பில் மிகவும் தனித்துவமாகவும், அதிக சிறப்பம்சங்களையும் பெற்றிருந்தது. மேலும், இந்தியர்களின் வாங்கும் திறனுக்கு தக்க பட்ஜெட்டிலும் எதிர்பார்க்கப்பட்டதால், பெரும் ஆவலை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதால், இந்தியாவில் தனது முதல் கார் மாடல் அறிமுகத்தை தள்ளி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு பிற்பாதியில் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு பிஎஸ்ஏ குழுமம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், தற்போது கொரோனாவால் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சிட்ரோன் சி5 ஏர் க்ராஸ் எஸ்யூவியை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி, பொருளாதாரம் மேம்படும் நேரத்தில் கார் மாடலை அறிமுகம் செய்வதே சிறந்ததாக இருக்கும் என்று டீலர்களிடம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், கார் மாடலை அறிமுகம் செய்வது உசிதமாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காலத்தை மனதில் வைத்து பணியாளர்கள், டீலர்கள், முதலீட்டாளர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகவும், பணியாளர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையிலுள்ள அலுவலகம், திருவள்ளூரில் உள்ள கார் ஆலை மற்றும் ஓசூரில் உள்ள எஞ்சின் உற்பத்தி ஆலைகள் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நிலைமை பொறுத்து ஆலைகளை திறப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

இதனிடையே, சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி டிசைன், எஞ்சின், வசதிகள் என அனைத்திலும் இந்தியர்களை வெகுவாக கவரும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களின் சந்தையை குறிவைத்து இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








