இந்தியாவில் டீசல் கார் விற்பனை: முக்கிய முடிவை எடுத்த சிட்ரோன்!
இந்தியாவில் டீசல் கார் விற்பனை குறித்த சிட்ரோன் எடுத்துள்ள கொள்கை முடிவு குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ வாகன குழுமம் அடுத்த ஆண்டு இந்திய கார் சந்தையில் இறங்க உள்ளது. தனது கீழ் செயல்படும் சிட்ரோன் பிராண்டு கார்களை இந்தியாவில் களமிறக்க உள்ளது.
இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, பல நிறுவனங்கள் டீசல் கார் விற்பனையை கைவிட்டன. இந்த சூழலில், சிட்ரோன் கார்களில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்குவது குறித்து பிஎஸ்ஏ குழுமம் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சிட்ரோன் நிறுவனத்தின் சிறிய வகை கார்களில் டீசல் எஞ்சின் தேர்வை வழங்குவதில்லை என்று பிஎஸ்ஏ குழுமம் முடிவு எடுத்துள்ளதாக ஆட்டோகார் இந்தியாசெய்தி தெரிவிக்கிறது.

அதேநேரத்தில், அந்நிறுவனம் முதலாவதாக கொண்டு வர இருக்கும் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட உள்ளது. அதாவது, சற்றே பெரிய வகை கார்களில் டீசல் எஞ்சின் தேர்வு வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி வரும் ஆண்டு முதல் காலாண்டு காலத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி ரூ.30 லட்சம் பட்ஜெட்டில் உள்ள டொயோட்டா ஃபார்ச்சூனர் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படும்.

புதிய சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். அதேநேரத்தில், ஓசூரில் உள்ள பிஎஸ்ஏ குழுமத்தின் எஞ்சின் ஆலையில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த எஞ்சின் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் சிட்ரோன் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக கார்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய செய்தியின்படி, இதற்கான சாத்தியக்கூறுகள் மிக குறைவாகவே உள்ளன.

மேலும், 2022ம் ஆண்டு புதிய காம்பேக்ட் எஸ்யூவியை கொண்டு வரவும் பிஎஸ்ஏ திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும். இந்த எஸ்யூவியில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








