கோவை: பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் விஜயகுமார் தற்கொலை!
கோவையை சேர்ந்த பிரபல ரேஸ் கார் ட்யூனிங் நிபுணர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மோட்டார் பந்தய பிரியர்கள், வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (43). கார் ரேஸராக இருந்து பின்னர் ரேஸ் கார்களை ட்யூனிங் செய்யும் ஒர்க்ஷாப்பையும் துவங்கி நடந்தி வந்தார். இதனால், இவர் கார் பந்தய வீரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நபராக மாறினார்.
விஜயகுமார் ட்யூனிங் செய்து கொடுத்த ரேஸ் கார்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இந்த துறையில் இருந்த ஆர்வம் காரணமாக, ரேஸ் கார் ட்யூனிங் ஒர்க்ஷாப்பை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தார். இதற்காக, அதிக பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்பார்த்த அளவு போதிய வருவாய் இல்லை என்று தெரிகிறது. இதனால், ஒர்க்ஷாப்பை விட்டுவிட்டு, கோவை கருமத்தம்பட்டியல், ஸ்பின்னிங் மில் ஒன்றை ஒத்திகைக்கு எடுத்து நடத்தி வந்தார். இந்த நிலையில், ஸ்பின்னிங் மில் தொழிலிலும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 28ந் தேதி விரக்தியில் ஸ்பின்னிங் மில் உள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஸ்பின்னிங் மில்லிற்கு வந்த நிறுவனத்தின் மேலாளர், அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பின்னர், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும், உடல் கூறு ஆய்வுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு வந்து, அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தொழிலில் தொடர் நஷ்டம் காரணமாக, ஏற்கனவே ஒருமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அப்போது உறவினர்கள் காப்பாற்றியுள்ளனர்.. விஜயகுமாருக்கு மோட்டார் பந்தய உலகினரும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications