கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை வழங்கும் ஓலா டாக்சி!
கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதி உதவியை வழங்க இருப்பதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னை உலக மக்களை ஒடுங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா வைரஸ் பிரச்னை உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் மிகப்பெரிய அளவில் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து சேவை நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய டாக்சி நிறுவனமாக விளங்கும் ஓலா கடும் இழப்பை சந்தித்து வருகிறது.

எனினும், கொரோனா தடுப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது ஓலா டாக்சி நிறுவனம். அந்த வகையில், கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ.8 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதில், ரூ.5 கோடி பிரதமர் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான முயற்சிகளுக்கும், ரூ.3 கோடி பல்வேறு மாநில முதல்வர்களின் நிவாரண நிதி திட்டத்திற்கும் வழங்க முடிவு செய்துள்ளதாக ஓலா டாக்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகவர்வால் கூறுகையில்,"கொரோனாவிலிருந்து விடுபட நாட்டு மக்கள் நலனுக்காக உழைக்கும் சுகாதாரத் துறை பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் பணியாளர்கள், அதிகாரிகள், காவல் துறையினரின் பணி மிகவும் உன்னதமாக கருதுகிறோம்.

கொரோனா தடுப்புப் பணிகளில் அரசுத் துறைகளுடன் இணைந்து செயலாற்றவும், சமூகத்திற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து பணியாற்ற உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டாக்சி ஓட்டுனர்கள், ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்களுக்கா தனது ஓலா பவுண்டேஷன் மூலமாக நிதி திரட்டி உதவும் முயற்சியில் ஓலா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதுவரை ரூ.20 கோடி அளவுக்கு நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த முயற்சிக்காக ஓலா டாக்சி தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் தனது ஓர் ஆண்டு சம்பளத்தை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி, வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஓட்டுனர்களுக்கு நிதி உதவி செய்யும் முயற்சிகளில் ஓலா ஈடுபட்டுள்ளது.

மேலும், பெருநகரங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவையில் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுவதால், பிற நோயாளிகளுக்கு அவசர சேவைகள் கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து, பிற நோயாளிகளின் அவசர தேவைகளுக்காக தனது வாடகை கார்கள் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் திட்டத்தையும் ஓலா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








